மாமன்றத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: சர்ச்சையில் கோவை மேயர்!

மாமன்றத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: சர்ச்சையில் கோவை மேயர்!

Share it if you like it

மாமன்றத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விவகாரத்தில் கோவை மேயர் கல்பனா சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

கோவை மாநகராட்சி மேயராக இருப்பவர் கல்பனா ஆனந்தகுமார். அரசியலில் பெரிய பின்புலம் இல்லாத நிலையில், மாவட்டச் செயலாளர் உட்பட முக்கியப் புள்ளிகளை எல்லாம் ஓவர்டேக் செய்து கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டவர். இதனால், மேயருக்கும் பதவி கிடைக்காத முக்கியப் புள்ளிகளின் கவுன்சிலர் மனைவிகளுக்கும், மண்டலக் குழுத் தலைவர்களுக்கும் மிகப்பெரிய ஈகோ யுத்தமே நடந்து வருகிறது. ஆகவே, தொட்டதெல்லாம் குற்றம் என்று மேயர் கல்பனாவை கார்னர் செய்து வருகின்றனர் முக்கிய புள்ளிகள்.

இந்த சூழலில், தானாகவே வாண்டடாகப் போய் வம்பில் சிக்கி இருக்கிறார் மேயர் கல்பனா. அதாவது, கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் கடந்த 26-ம் தேதி மாமன்ற கூட்ட அரங்கில் நடந்தது. இரவு 9:30 மணி வரை நடந்த இக்கூட்டத்தில் அனைத்துக் கவுன்சிலர்களும் பங்கேற்றனர். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர், கூட்டம் நிறைவடையும் தருணத்தில், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறைக்கு பிறந்தநாள் என்று கவுன்சிலர் ஒருவர் தெரிவித்தார். உடனே, அனைவரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கூட்டம் முடிந்ததும் மாமன்றக்கு கேக் வரவழைக்கப்பட்டது. பிறகு, மேயர் கல்பனா, கமிஷனர் (பொ) ஷர்மிளா, உதவி கமிஷனர் (நிர்வாகம்) சரவணன் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டிய தெய்வானை, மேயருக்கு ஊட்டினார். இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுணன், “கோவை மாநகராட்சியின் மாமன்றம் ராணி விக்டோரியா நினைவாக 1892-ல் கட்டப்பட்டது. பராம்பரியமிக்க இக்கட்டட வளாகத்தில் மாநகராட்சி கூட்டங்கள் நடந்து வருகின்றன. முக்கிய பிரமுகர்களான ரத்தினசபாபதி முதலியார், பொன்னுசாமி செட்டியார், நஞ்சப்ப செட்டியார், சுக்கூர் போன்றவர்கள் கோவை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டிய மாமன்றம் இது. அப்படிப்பட்ட மன்றத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த மேயர் தலைமையில், துணை கமிஷனர், உதவி கமிஷனர் போன்றோர் சேர்ந்து, மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இது, மக்களின் கோரிக்கையை பற்றி பேசும் மாமன்றமா அல்லது கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் ஆடம்பர மண்டபமா? மேலும், அன்றைய கூட்டத்தில், சொத்து வரியை உயர்த்திவிட்டு, மக்களின் கஷ்டங்களை மறந்து பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்தியதை, மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it