ஆதீன விஷயத்தில் அறநிலையத்துறை தலையிடாது: பா.ஜ.க., அண்ணாமலைக்கு அடிபணிந்த தி.மு.க. அரசு!

ஆதீன விஷயத்தில் அறநிலையத்துறை தலையிடாது: பா.ஜ.க., அண்ணாமலைக்கு அடிபணிந்த தி.மு.க. அரசு!

Share it if you like it

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதேபோல, ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளிலும் ஹிந்து சமய அறநிலையத்துறை தலையிடாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருப்பது, பா.ஜ.க. மற்றும் அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்தார். காவி வேட்டி, வெள்ளை சட்டை சகிதம் வந்தவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தருமபுரம் ஆதீனத்திற்கு வந்த அமைச்சர், ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார். பின்னர், ஆதீன மடத்தில் கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் என்கிற விருந்தினர் மாளிகையை அமைச்சர் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதன் பிறகு, தருமை ஆதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27,000 மரக்கன்றுகள் நடும் பணியில் ஒரு பகுதியாக ஆதீன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அமைச்சர் சேகர்பாபு, அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். தொடர்ந்து, ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சைவத்துடன் தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும். அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் தலையிடாது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மற்றபடி, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. மேலும், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கடையூர் கோயில் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. இதுபோன்ற கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடவே தலையிடாது. அதேசமயம், பொதுக்கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. நியாயத்தின்படியே, அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்” என்றார்.


Share it if you like it