சிறுபான்மையினருக்கு எதிரி தி.மு.க.தான்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத் அதிரடி!

சிறுபான்மையினருக்கு எதிரி தி.மு.க.தான்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத் அதிரடி!

Share it if you like it

சிறுபான்மைக்கு எதிராக இருப்பது தி.மு.க.தானே தவிர, பா.ஜ.க. அல்ல என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷேக் தாவூத் அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அந்த சேனலின் நெறியாளர், திராவிட மாடல் ஆட்சியில்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் தி.மு.க. கூறிவருவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷேக் தாவூத், ‘உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். அப்படியானால் அந்த இஸ்லாமியர்கள் எல்லாம் பாதுகாப்பு இல்லாமல் ஓடிப்போய் விட்டார்களா? மேலும், மற்ற மாநிலங்களில் வசிக்கும் இஸ்லாமியர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்களா?

நாட்டிலுள்ள மக்களுக்கு இவர்கள்தான் பாதுகாப்பு, அவர்கள்தான் பாதுகாப்பு என்று பேசுவதே குற்றம். இவர்கள் வந்ததால்தான் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றால், இவர்கள் வரவில்லை என்றால் இந்தியாவிலேயே இருக்க முடியாதா? நாங்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையா? இந்தியராக இருந்தால் தி.மு.க.வுக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும். தி.மு.க.வைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? இப்படி பேசுவதே ஜனநாயகத்துக்கு எதிரான கருத்து. இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் யாருமே முன்னேற முடியாது. அப்புறம் என்ன தமிழர்? 50 ஆண்டுகளாக தமிழர்களுக்கான ஆட்சி என்று கூறிவருகின்றனர். அப்படியெனில் ஆட்சியில் இருக்கும் தமிழர்களுக்கானது மட்டும்தானா? எங்களைப் போன்ற தமிழர்களுக்கு இல்லையா?

ஜனநாயகத்தின்படி பேசுங்கள் அல்லது தமிழர்கள் ஆட்சி என்று பேசுங்கள். திராவிட மாடல் ஆட்சி என்று புனைப்பெயரை சூட்டுவதால் என்ன கிடைத்துவிடப் போகிறது? நம்மளை நாமே ஏமாற்றிக் கொள்வதா? வணக்க வழிபாடு நடத்தினால் தமிழர் இல்லை என்று ஏமாற்றுகின்றனர். இஃப்தார் விருந்துக்கு வந்தால் தொப்பியுடனும், கிறிஸ்தவ நிகழ்ச்சியில் நானும் கிறிஸ்தவன்தான் எனவும் ஏமாற்றுகின்றனர்.எங்களை தமிழர்களாகவே வாழவிட மாட்டீர்களா? என் தாய்மொழி தமிழ்; நானும் தமிழன் என்று சொல்லிக்கொண்டாலும் கேட்பதில்லை. தேவாலயம், மசூதி செல்பவர்கள் தமிழன் இல்லை என்றாவது சொல்லுங்கள். நல்ல ஆட்சியை கொடுங்கள். தமிழ் மக்களை முன்னேற்றுங்கள். எல்லா தமிழர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுங்கள். ஒரு குடும்ப ஆட்சியோ அல்லது ஒருசாரர் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது வேண்டாம். ஜனநாயக முறைப்படி மக்களுக்கு நல்லது செய்பவர்கள் மாறி மாறி வரட்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய நெறியாளர், ‘இது ஈ.வெ.ரா. மண், திராவிட மண்; இங்கு பா.ஜ.க. காலூன்ற முடியாது என்று கூறுகின்றனரே’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஷேக் தாவூத், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை ஏற்றுக்கொள்ளும்போது, தமிழகத்தில் தமிழரான அண்ணாமலை முதல்வராக வந்தால் என்ன? ஆனால், பா.ஜ.க.வை புலி, சிங்கம், கரடி என்று கூறி ஏன் மக்களிடம் பயத்தை கொண்டு வருகிறீர்கள்? மத்திய அரசிடம் பேசும்போது அந்த பயம் இல்லையா? திராவிட கட்சிகள் மாறி மாறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் அது நல்லக்கட்சி. அதே தனியாக வந்தால் கடித்துவிடும் என்பது போல பேசுகின்றனர். ஜனநாயக நாட்டில் ஒரு சமுதாயத்தை ஏன் பயமுறுத்துகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.


Share it if you like it