மோடியும், காந்தியும் ஒண்ணு: தி.மு.க. எம்.பி. புகழாரம்!

மோடியும், காந்தியும் ஒண்ணு: தி.மு.க. எம்.பி. புகழாரம்!

Share it if you like it

காந்தியைப் போலவே மோடியும் தேச பக்தி மிகுந்தவர். ஆகவே, மோடியும் காந்தியும் ஒன்று என்று ஐ.ஜே.கே. கட்சித் தலைவர் பாரிவேந்தர் பச்சைமுத்து கூறியிருக்கிறார்.

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருப்பவர் பாரிவேந்தர் பச்சைமுத்து. எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் தலைவரும் இவர்தான். 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் தற்போது தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருகிறார். மிகப்பெரிய கல்வியாளரான இவர்தான், மோடியும் காந்தியும் ஒன்று என்று கூறியிருக்கிறார்.

திருச்சி புத்தூர் பகுதியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழா இன்று நடந்தது. அச்சங்கத்தின் நிறுவனத் தலைவரும், எம்.பி.யுமான பாரிவேந்தர் அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஐ.ஜே.கே. பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், “மோடி எங்களுக்கு பங்காளியும் அல்ல, பக்கத்து வீட்டுக்காரரும் அல்ல, பக்கத்து மாநிலக்காரரும் இல்லை. இந்த நாட்டின் மீது பற்று கொண்ட ஒரே ஒரு நபர் மோடிதான். நம்ம நாட்டின் மீது பற்று கொண்டவர்களில் காந்தி போன்றவர்களை பார்த்திருப்போம். அதன் பிறகு, தற்போதுதான் இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். உலக நாடுகள் மத்தியில் இந்தியா என்றால் தலைநிமிர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு வருகிறார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் உழைக்கிறார். அவருக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியாக தவறான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். அவரை நேசிப்பார்கள்; ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவின் பெருமையை பாதுகாக்க, நாட்டுப்பற்று கொண்டு நாட்டுக்காக உழைத்து வரும் பெருமகன் மோடி. இதே தமிழகம் மோடியை புகழ்ந்து பாராட்டும் காலம் விரைவில் வரும். அது வெகு தொலைவில் இல்லை. போட்டித்தேர்வை எதிர்கொள்ள அடிப்படைக் கல்வி வலுவாக இருக்க வேண்டும். அதற்கான தகுதியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சற்று கடினமாக இருந்தாலும் கூட, நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை சரியானது. அதிலிருந்து ஒன்றிரண்டை எடுத்து போட்டு உருவாக்கும் மாநில கல்விக் கொள்கை தேவையற்றது. மருத்துவக் கல்வி உட்பட விண்ணப்பங்கள் அதிகமாக வரும்போது போட்டி தேர்வு மட்டுமே சமூக நீதியை பாதுகாக்கும்” என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில்தான், அம்பேத்கருக்கு நிகரானவர் மோடி என்று இசைஞானி இளையராஜா கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாத குறைப் பிறந்தவர்கள் என்று இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவரும் மோடியும் ஒன்று என்று இயக்குனர் பேரரசு கூறினார். தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் ஐ.ஜே.கே. தலைவரும், எம்.பி.யுமான பாரிவேந்தர் பச்சைமுத்துவும், காந்தியும், மோடியும் ஒன்று என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே, இளையராஜா, பாக்கியராஜ் ஆகியோர் கூறியதையே ஜீரணிக்க முடியாமல் தமிழக உ.பி.ஸ்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் பாரிவேந்தரை மோடியை புகழ்ந்திருப்பதால், இஞ்சி தின்ற குரங்கைப் போல விழித்து வருகிறார்கள்.

இப்புடி கேப் விடாம அடிச்சா எப்புடிங்க!


Share it if you like it