மோடிதான் எங்களை ஆள வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்: பாக். இளைஞரின் வீடியோ வைரல்!

மோடிதான் எங்களை ஆள வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்: பாக். இளைஞரின் வீடியோ வைரல்!

Share it if you like it

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்நாட்டு இளைஞர் ஒருவர், ‛இந்திய பிரதமர் மோடிதான் பாகிஸ்தானை ஆள வேண்டும் என்று எல்லாம் வல்ல கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்’ என்று கூறியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அப்படியே கிடைத்தாலும் விண்ணை முட்டும் விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது, ஒரு லிட்டர் பால் விலை 250 ரூபாய்க்கும், கோழி இறைச்சி ஒரு கிலோ 700 முதல் 800 ரூபாய்வரையும், கோதுமை ஒரு மூட்டை 3,000 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பஞ்சத்தில் தவித்து வருகிறார்கள். அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் சமீபத்தில் பேசும்போது, பாகிஸ்தான் திவாலாகி விட்டது என்று கூறியிருந்தார். அதேசமயம், இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதோடு, விலை குறைவாகவும் இருக்கிறது.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் இந்திய பிரதமர் மோடிதான் எங்களையும் ஆள வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த யூடியூபரான சனா அம்ஜத், அந்நாட்டு இளைஞர் ஒருவரிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அரசு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். அதற்கு அந்த இளைஞர், ஷெபாஷ் ஷெரீப் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கியதுடன், “பாகிஸ்தானில் பிறக்கக்கூடாது என்று விரும்புகிறேன். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்படாமல் இருந்திருக்க விரும்புகிறேன். அப்போதுதான் தக்காளியை கிலோ 20 ரூபாய்க்கும், கோழிக்கறியை கிலோ 150 ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாய்க்கும் வாங்குவோம். எங்களுக்கு ஒரு இஸ்லாமிய தேசம் கிடைத்தது துரதிர்ஷ்டவசமானது, ஆனால், இங்கு இஸ்லாத்தை நிறுவ முடியவில்லை. இந்திய பிரதமர் மோடி, நம்மை விடச் சிறந்தவர். அங்குள்ள மக்கள் மோடியை மதிக்கின்றனர், அவரை பின்தொடர்கின்றனர்.

எங்களுக்கு நரேந்திர மோடி கிடைத்தால், நவாஸ் ஷெரீப்போ, பெனாசிரோ, இம்ரானோ, முஷாரப்போ தேவைப்படாது. எங்களுக்குத் தேவை நரேந்திர மோடி மட்டுமே. அவரால் மட்டுமே நாட்டில் நிலவும் மோசமான நிலைமையை சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருக்கிறது. மோடியின் ஆட்சியின் கீழ் நான் வாழத் தயார். அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியர்களுக்கு தக்காளி, சிக்கன் போன்றவை நியாயமான விலையில் கிடைக்கின்றன. மோடியை நமக்கு (பாகிஸ்தானியர்களுக்கு) கொடுத்து, நம் நாட்டை ஆள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று கண்ணீருடன் கூறுகிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Share it if you like it