ஜெபக் கூட்டத்துக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

ஜெபக் கூட்டத்துக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Share it if you like it

ஜெபக்கூட்டத்துக்கு வந்த பெண்ணிடம் மகன் அத்துமீறவே, போலீஸில் புகார் அளிக்கப்பட்டதால், மதபோதகர் குடும்பத்துடன் தலைமறைவாகிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ளது கலந்தபனை சியோன்புரம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த டேவிட் ஜேக்கப் ராஜ், கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரின்ஸி, மகன் அனிஸ் பவுல். மதபோதகரான டேவிட் ஜேக்கப் ராஜுக்கு மனைவியும், மகனும் உதவியாக இருந்திருக்கிறார்கள். இந்த சபையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்துக்கு அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பக்கத்து கிராமங்களில் இருந்தும் பலரும் வருவதுண்டு. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் ஜெபக்கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொள்வர். அந்த வகையில், கலந்தபனை அருகிலுள்ள வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவரும் ஜெபக்கூட்டத்துக்கு வந்து சென்றிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கும், மதபோதகர் ஜேக்கப் மகன் அனிஸ் பவுலுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறி இருக்கிறது. இதன் பிறகு, இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வெளியூர்களுக்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக இருந்து வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நாம் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லிச் சொல்லியே, அந்தப் பெண்ணிடம் அத்துமீறி இருக்கிறார் அனிஸ் பவுல். இதனால், அந்தப் பெண்ணும் நம்பிக்கையுடன் சம்மதித்திருக்கிறார். இப்படியாக சில மாதங்கள் ஓடிய நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்தப் பெண் அனிஸ் பவுலிடம் கூறி இருக்கிறார். ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்து விட்ட அனிஸ் பவுல், அதன் பிறகு அந்தப் பெண்ணிடம் பேசுவதையே நிறுத்தி விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், மதபோதகர் ஜேக்கப் ராஜுவிடமும், அவரது மனைவி பிரின்ஸியிடமும் நடந்த விவரத்தைக் கூறியிருக்கிறார்.

ஆனால், அப்பெண் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், காதலாவது கத்திரிக்காயாவது என்று சொல்லி, கணவன் மனைவி இருவரும் அப்பெண்ணை மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த அப்பெண், பணகுடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும், அனிஸ் பவுல் மற்றும் அவரது தந்தையும், மதபோதகருமான டேவிட் ஜேக்கப் ராஜ் ஆகியோர் தன்னிடம் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் அப்பெண் போலீஸாரிடம் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இந்த விஷயம் மதபோதகர் ஜேக்கப்புக்குத் தெரியவரவே, அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் தலைமறைவாகி விட்டார். அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடை, அனிஸ் பவுலும், மதபோதகர் ஜேக்கப்பும் தன்னிடம் பேசிய ஆடியோக்களை அப்பெண் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த ஆடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Share it if you like it