‘ஹனுமன் உப்புக்கொத்தி’… புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு!

‘ஹனுமன் உப்புக்கொத்தி’… புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு!

Share it if you like it

ஹனுமன் உப்புக்கொத்தி என்கிற புதிய பறவை இனம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழகத்தில் தென்கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளிலும் இலங்கையும் மட்டுமே வசிக்கக் கூடிய பறவை இனம் என்பது தெரியவந்திருக்கிறது.

மதுரை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையைச் சேர்ந்த பறவை ஆய்வாளர் என்.ரவீந்திரன் நடராஜன், கோவையைச் சேர்ந்த பறவை ஆய்வாளர் எச்.பைஜு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியல் துறையைச் சேர்ந்த எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர், இந்தியாவின் மன்னார் வளைகுடா பகுதியைச் சேர்ந்த தென்கிழக்கு கடற்கரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கரையோரப் பறவைகள் பற்றிய ஆய்வுப் பணிகளை செய்து வருகின்றனர். மேலும், தமிழக வனத்துறையுடன் இணைந்து வலசை மற்றும் வாழ்விட பறவைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில்தான், உலகளவில் புதிய பறவை இனமான ஹனுமான் உப்புக்கொத்தி (சரத்ரியஸ் சீபோஹ்மி) பறவைகள் தென்னிந்திய கிழக்கு கடற்கரையில் இனப்பெருக்கம் செய்வதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்களின் இந்த ஆய்வுக் கட்டுரையை சர்வதேச மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழான “ஜர்னல் ஆஃப் த்ரட்டன்ட் டாக்ஸா’ என்கிற பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தப் பறவை இனம் முன்பு “கென்டிஷ் உப்புகொத்தி” என்கிற பறவை இனத்தின் கிளை இனமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயர்களால் கென்டிஷ் ப்ளவர் என்று அறியப்பட்டது.

இப்பறவையின் உள்ளினமான பறவைகள் நமது தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியிலும், இலங்கையின் மேற்கு கடற்கரையோர பகுதியான மன்னார் வளைகுடா பகுதியிலும் காணப்பட்டன. இந்த சூழலில், இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலக அளவில் இப்பறவையின் மரபணுவை வைத்து ஆய்வு செய்தார்கள். இதைத் தொடர்ந்து, இப்பறவை கென்டிஷ் உப்புக்கொத்தி அல்ல, இது ஒரு தனிப்பட்ட இனம் என்று அறிவித்ததோடு, இப்பறவைகளுக்கு ஹனுமன் உப்புக்கொத்தி என்றும் ஏப்ரல் 20-ம் தேதி பெயரிட்டார்கள். இந்த நிலையில்தான், நமது தமிழக ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய பறவையின் 4 புதிய இனப்பெருக்க பகுதிகளையும், தங்களுடைய தொடர் கள ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். இதை தகுந்த ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.


Share it if you like it