தலையை கொடுத்து தேசத்தை காத்த – மருது சகோதரர்கள்

தலையை கொடுத்து தேசத்தை காத்த – மருது சகோதரர்கள்

Share it if you like it

பெரிய மருது தமிழகத்தின் ஜோராவர் சிங் மற்றும் ஃபதே சிங்

மருது பாண்டியர் சகோதரர்கள் (பெரிய மருது மற்றும் சின்ன மருது), 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தமிழ்நாட்டின் சிவகங்கையை ஆண்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக  வெடித்த முதல் இந்திய சுதந்திரப் போர் என்று பொதுவாகக் கூறப்படும், 56 ஆண்டுகளுக்கு முன்பே, 1801 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி தமிழ்நாடு, திருச்சி திருவரங்கம் கோயிலில் இருந்து, காலனிய ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலைப் பிரகடனத்தை முதன் முதலில் வெளியிட்டவர்கள், மருது சகோதரர்கள்.

பெரிய மருது 15.12.1748 அன்று, இராமநாதபுரம் நரிக்குடி என்ற சிறிய குக்கிராமத்தில் பிறந்தார். 1753 இல் இளைய மருது பாண்டியர் பிறந்தார். இவர்களது தந்தை, உடையார் சேர்வை, மாநில ராணுவத்தில் ஜெனரலாக பணி புரிந்தார். மேலும் அவர், தனது குடும்பத்தை நரிக்குடியில் இருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார்.
மருது சகோதரர்கள், பாரம்பரியமாக இராமநாதபுரம் மாநில இராணுவத்தின், சொந்த தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றனர். “வளரி”, “பூமராங்” என்பது தெற்காசியாவின் பழங்குடியின மக்களால் (பண்டைய தமிழர்கள்) முதலில் பயன்படுத்தப்பட்ட ஒரு தனித்துவமான ஆயுதமாகும். மருது சகோதரர்கள், வளரியை எறிந்து, அதை ஆயுதமாகப் பயன்படுத்துவதில், சிறந்த வல்லுநர்கள். மருது சகோதரர்கள், ஆங்கிலேய காலனித்துவப் படைகளுக்கு எதிரான அவர்களின் “பொலிகர்” போர்களில், வளரியை வெற்றிகரமாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்கள், பல தற்காப்புக் கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று, துணிச்சலான வீரர்களாக, தங்களை வேறுபடுத்திக் கொண்டனர். 
முத்து வடுகநாதர், பாண்டியர் இருவரின் துணிச்சலான செயல்களை அறிந்து, சிவகங்கை இராணுவத்தில் பணியாற்ற அவர்களை நியமிக்குமாறு இராமநாதபுரம் மன்னரிடம், சிவகங்கை ராஜா வேண்டுகோள் விடுத்தார். அவர்கள் சிவகங்கை இராணுவத்தின் ஜெனரல்களாக நியமிக்கப் பட்டனர்.
1772 ஆம் ஆண்டில், லெப்டினன்ட் கர்னல் போன் ஜோர் தலைமையில், கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில இராணுவம், காளையார் கோவிலில் அரசைத் தாக்கியது. போரின் போது, ராஜா முத்து வடுகநாதர், போர்க் களத்தில் உயிர் இழந்தார். ஆனால் மருது சகோதரர்கள், ராஜா முத்து வடுகநாதரின் மனைவி ராணி வேலு நாச்சியாருடன் தப்பித்து, அகதிகளாக மைசூர் சுல்தான் ஹைதர் அலி ஆட்சி செய்த திண்டுக்கல்லுக்கு வந்தனர். 
கிழக்கிந்தியக் கம்பெனியின் கூட்டணிக் கூட்டாளியான ஆற்காடு நவாப், சிவகங்கை மாநில மக்களிடம் இருந்து, எட்டு ஆண்டுகளாக எந்த வரியும் வசூலிக்க முடியாமல் தவித்ததால், சிவகங்கை ஆட்சியை மீண்டும் ராணி வேலு நாச்சியாருக்கு பெற்றுத் தந்தார்,
மருது சகோதரர்கள். ஆயுதங்களுடன், 12,000 பேர் சிவகங்கையைச் சுற்றி வளைத்து, ஆற்காடு நவாபின் பகுதிகளைக் கொள்ளை அடித்தனர். நவாப் 1789 ஆம் ஆண்டு, மார்ச் 10 ஆம் தேதி, சென்னை கவுன்சிலிடம் உதவி கேட்டு முறையிட்டார். 1789ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி, ஆங்கிலேயப் படைகள் கொல்லங்குடியைத் தாக்கின. மருதுவின் பெரும் படையினால், அது தோற்கடிக்கப் பட்டது.
இவர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீர பாண்டிய கட்டபொம்மனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தனர். கட்டபொம்மன் மருதுகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தினார். 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி, கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப் பட்ட பிறகு, சின்ன மருது கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத் துரைக்கு அடைக்கலம் கொடுத்தார். 
இந்தியாவில் தங்கள் எதிர்காலத்திற்கு, இது மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் எனஆங்கிலேயர்கள்,கருதினர். அவர்கள் மருது பாண்டியர்களின் கிளர்ச்சியை ஒடுக்க, பிரிட்டனில் இருந்து கூடுதல் படைகளை கேட்டு, அதன்படி பெரும் படையுடன்  விரைந்தனர். இந்தப் படைகள், காளையார் கோவிலில், மருது பாண்டியர்களின் படையைச் சுற்றி வளைத்து, சிதறடித்தனர் . மருது சகோதரர்களும் அவர்களின் உயர் மட்டத் தளபதிகளும், தப்பிச் சென்றனர். அவர்கள் மீண்டும் குழுவாக, பிரிட்டிஷார் மற்றும் அவர்களது கூட்டாளிகளுடன் விருப்பாட்சி, திண்டுக்கல் மற்றும் சோழபுரத்தில் போரிட்டனர். அவர்கள் விருப்பாட்சியில் நடந்த போரில் வெற்றி பெற்ற போது, ​​மற்ற இரண்டு போர்களிலும் தோற்றனர்.
ஆங்கிலேய ராணுவத்தால் மருது சகோதரர்களை கைது செய்ய முடியவில்லை. காளையார் கோவில் கோபுரம் மீது, மருது சகோதரர்களின் பக்தி பற்றி அறிந்ததும், காளையார் கோவில் கோபுரத்தின் முன்  சகோதரர்கள் வந்து சரணடைய வேண்டும். இல்லையேல், கோபுரம் தகர்கப்படும்  என்று பகிரங்கமாக அறிவித்தனர். இந்த அறிவிப்பைக் கேட்ட மருது சகோதரர்கள், தூக்கிலிடப் படுவார்கள் என்பதை நன்கு அறிந்தும், ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தனர்.
மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட இருந்த போது அவர்கள் இராணுவ நீதிமன்ற நீதிபதியிடம், தங்கள் கடைசி விருப்பமாக, இறந்த பிறகும் கோவில் கோபுரத்தை, எப்போதும் பார்த்த படியே இருப்பதற்காக, தங்கள் தலையை, கோயிலின் அருகிலேயே புதைக்க வேண்டும் என்று, தெரிவித்தனர். காளையார் கோவில்  கோபுரத்தின் உச்சியில் இருந்து, மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரத்தைக் காணலாம், இந்த இரண்டு கோவில்களுக்கும் இடையிலான தூரம் சுமார் 66 கிமீ ஆகும்.
மருது சகோதரர்கள் போர் வீரர்கள் மற்றும் துணிச்சலுக்கு பெயர் பெற்றவர்கள் மட்டுமல்ல, அவர்கள் மிகச் சிறந்த நிர்வாகிகளாகவும் இருந்தனர். 
- கணேசன்

Share it if you like it