தகவல் அளித்தும் காவல்துறை மெத்தனம் : மர்ம நபர்களால் ஊடக செய்தியாளர் தாக்குதல் : ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறதா ?

தகவல் அளித்தும் காவல்துறை மெத்தனம் : மர்ம நபர்களால் ஊடக செய்தியாளர் தாக்குதல் : ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறதா ?

Share it if you like it

திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபுவை நேற்று காலை முதல் சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், தன்னை யாரோ சிலர் பின் தொடர்வதாகவும், தனது தந்தையிடம் முகவரி உள்ளிட்டவை அந்த நபர்கள் கேட்டறிந்ததாகவும் காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்திருந்தார்.

பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்த நேசபிரபுவை மர்ம கும்பல் திடீரென வந்து சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதில் செய்தியாளர் நேசபிரபு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்தியாளர் நேசபிரபுவை மர்ம கும்பல் வெட்டிய சம்பவத்தை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு. இவரை நேற்று இரவு , செய்தியாளர் அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளனர், ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனத்தில் இருந்ததால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபர்கள் தாக்க வருவதாக காவல் துறையினரிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :- திருப்பூர் பகுதி செய்தியாளர் சகோதரர் திரு நேசபிரபு அவர்களை, சமூக விரோதிகள் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ள செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தினசரி வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையின் கைகள் திமுக அரசால் முற்றிலுமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால், ஆட்சியின் தவறுகளையோ, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையோ, ஊடகங்கள் கேள்வி எழுப்பாமல், கேள்வி கேட்பவர்களையும் மௌனமாக்கவே முயல்கிறார்கள்.

அதிகாரத்தைக் கேள்வி கேட்கவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, மூத்த ஊடகவியலாளர்கள் விரும்புவதில்லை. நேர்மையான சில ஊடகவியலாளர்களும் சமூக விரோதிகளால் இது போன்ற தாக்குதலுக்கு உள்ளாவதால், அதிகாரத்துடன் அனுசரித்துச் செல்லவே அனைவரும் மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைப்பவர்களும், அதனை மக்களுக்காகப் பயன்படுத்துவதில்லை.

திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளது. ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். திமுக அரசின் தோல்விகளை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைத்து, மயிலிறகால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குறித்த பிரச்சினை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்.


Share it if you like it