லஞ்சம் வாங்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது!

லஞ்சம் வாங்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது!

Share it if you like it

அரசு மானியமாக வழங்கும் பணத்தை தருவதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது லஞ்ச மற்றும் ஊழல் புகார்கள் எழுந்து வருகின்றன. டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மதுபான கொள்கை வழக்கில் சிக்கி இருக்கிறார். அதேபோல, டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு இருக்கிறது. மேலும், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மீது பாலியல் அத்துமீறல் வழக்கு இருக்கிறது. தவிர, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்சிங்லா, அரசு ஒப்பந்தங்களுக்கு 1 சதவிகிதம் கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த சூழலில்தான், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் எம்.எல்.ஏ. லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரை அடுத்த பதிண்டா கிராமப்புறத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமித் ரத்தன் கோட்பட்டா. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர். இவரது உதவியாளர் ரஷிம் கார்க். இந்த சூழலில், அரசு மானியமாக வழங்கும் 25 லட்சம் ரூபாயை வழங்குவதற்கு, ரஷிம் கார்க் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக பதிண்டாவிலுள்ள குடா கிராமத் தலைவியின் கணவர் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார், 4 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் உதவியாளர் ரஷிம் கார்க்கை பிப்ரவரி 16-ம் தேதி கைது செய்தனர்.

தொடர்ந்து, இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமித் ரத்தன் கோட்பட்டாவுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால், ரஷிம் கார்க்குக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமித் ரத்தன் கோட்பட்டா கூறி, குற்றச்சாட்டை மறுத்து வந்தார். மேலும், பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த சூழலில்தான், 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், அமித் ரத்தன் கோட்பட்டாவுக்கு தொடர்பு இருப்தை பஞ்சாப் விஜிலென்ஸ் பீரோ உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ, அமித் ரத்தன் கோட்பட்டா நேற்று மாலை கைது செய்யப்பட்டிருக்கிறார்.


Share it if you like it