தூங்கமூஞ்சி ராகுல்: பங்கம் செய்த குலாம் நபி ஆசாத்!

தூங்கமூஞ்சி ராகுல்: பங்கம் செய்த குலாம் நபி ஆசாத்!

Share it if you like it

எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தால் பிரதமராகி விட முடியாது என்று கூறி, ராகுல் காந்தியை பங்கம் செய்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும், ஜனநாயக ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பொறுப்புகளை வகித்தவர். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர், ஜனநாயக ஆசாத் கட்சியை தொடங்கினார். இதன் பிறகு ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில்கூட ராகுல் குடும்பத்துக்கு நம் நாட்டின் விரும்பத்தகாத வெளிநாட்டு தொழிலதிபருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு குலாம் நபி ஆசாத் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு பற்றி ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் பேசிவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த குலாம் நபி ஆசாத், “பெண் தோழிகள் தொடர்பு, ஆண் நண்பர்கள் தொடர்பு பற்றி பேசுவதெல்லாம் வேஸ்ட். நான் ராகுலின் பாட்டி இந்திரா காந்தியுடனும் பணியாற்றி இருக்கிறேன். ராகுலின் தந்தை ராஜிவ் காந்தியுடனும் பணியாற்றி இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் 20 மணி நேரம் உழைப்பவர்கள்.

ஆனால், ராகுல் காந்தி வெறும் 20 நிமிடங்கள் கூட உழைப்பதில்லை. எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டும், ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தால் பிரதமராகி விட முடியாது. நாள் முழுவதும் உழைக்க வேண்டும். அப்போதுதான் பிரதமராக முடியும். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் மீண்டும் பிரதமராகி இருக்கிறார். ஆகவே, பொதுவெளியில் வெட்டிப் பேச்சு பேசுவதை விட்டு விட்டு உழைப்பதில் ராகுல் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it