இராமலிங்க சுவாமிகள் – வள்ளலார்

இராமலிங்க சுவாமிகள் – வள்ளலார்

Share it if you like it

இராமலிங்க சுவாமிகள் எத்தனையோ மகான்கள் அவதரித்த இப்புனித மண்ணில் வியக்கத்தக்க மகான் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள். சித்தர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர்.

இறைவன் ஒளிமயமானவன் என்கிற பேருண்மையை உலகுக்குணர்த்தியவர் அவர். சீவகாருண்ய ஒழுக்கத்தோடு அன்னதான சிறப்பையும் மக்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார் சுவாமிகள். இந்த நூற்றாண்டில் சமூக சீர்திருத்தவாதிகள் என்று தாங்களே சொல்லிக் கொள்ளும் பெரியவர்கள் போல் அல்லாமல் உண்மையான சமூக சமத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர்..இறைவன் ஒருவனே அவன் எப்பொழுதும்  சுடர் ஒளியாய் இருக்கிறார் என்பது அய்யாவின் கோட்பாடு..கடவுளை வைத்து ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதே இதன் விளக்கமாகம்.

 சிதம்பரத்துக்கு (தமிழ்நாடு) வடக்கே பத்துக் கல் தொலைவில் உள்ள மருதூர் என்னும் சிற்றூரில் 1823 ஆம் ஆணடு அக்டோபர் 5 இல் இராமலிங்கர் அவதரித்தார்.தந்தை இராமையாபிள்ளை, தாய் சின்னம்மை. குடும்பத்தில் மூத்தபிள்ளை சபாபதி. அடுத்து பிறந்தவர்கள் பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமுலை ஆகியோர்..இராமையா கணக்கராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். இராமலிங்கர் பிறந்த கொஞ்ச நாளிலேயே தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் சிக்கியது.ஆதரவற்ற சின்னம்மை குழந்தைகளுடன் சென்னை அருகிலுள்ள பொன்னேரிக்குச் சென்றார். அங்கே அவருடைய தாய்வீடு இருந்தது. பிறகு பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு சென்னையில் குடியேறினார்கள்.மூத்த பிள்ளை சபாபதி தமிழ் பயின்று ஆசிரியரானார். பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தும், வெளியிடங்களில் புராணச் சொற்பொழிவுகள் செய்தும் பொருள் தேடினார் அவர். போதிய வருமானம் வந்ததால் குடும்பம் நல்ல நிலையை அடைந்தது.

இராமலிங்கரோ பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதில் நாட்டம் கொள்ளவில்லை. கந்தகோட்டத்தில் முருகனைச் சேவித்துப் பாடல்கள் பாடத் தொடங்கினார்.பாடம் புகட்டும் ஆசான் மாணவரின் ஆன்ம வளர்ச்சி கண்டு வியநதார். அதே சமயம் அவருக்கு மேலும் பாடம் நடத்த மறுத்துவிட்டார்.தம்பியின் போக்கில் அண்ணன் சபாபதி சினமடைந்தார். அவரை வீட்டில் சேர்ப்பதோ, உணவளிப்பதோ கூடாது என்று தடை விதித்தார். ஆனால் அண்ணனுக்குத் தெரியாமல் அண்ணியார் அவருக்கு உணவளிப்பார்.

ஒரு கட்டத்தில் அண்ணியின் வேண்டுகோளுக்கிணங்கி இராமலிங்கர் வீட்டுக்குத் திரும்பியதோடு படிப்பைத் தொடரவும் செய்தார்.அப்போது அவருக்கு வயது ஒன்பது. படிப்பதற்காக நூல்களையும், எழுது பொருள்களையும் பெற்றுக்கொண்டு தமது அறைக்குள் நுழைவார்.

 அறைக்குள்ளிருந்த கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வார். மடை திறந்த வெள்ளமாய் அவருக் குள்ளிருநது பாடல்கள் வெளிப்படும். அதில் ஆச்சரியப் பட என்ன இருக்கிறது, இறைவனின் அருட்குழந்தையாயிற்றே அவர்!சிவயோகி ஒருவர் அளித்த திருநீற்றை உண்டமையால் சின்னம்மைக்கு அருளே வடிவமாய் பிறந்த குழந்தை இராமலிங்கர்.திருநீறளித்த யோகி, ‘தாயே உங்களுக்கு அருட்செல்வன் பிறப்பான். அவன் கருணைமிக்கவனாய் விளங்கு வான்’ என்று ஆசீர்வதித்துச் சென்றார். அந்த ஆசியின் பலனோ என்னவோ சிறுவயதிலேயே அவருக்குத் தமிழ்ப் புலமை ஏற்பட்டிருந்தது.அதுமட்டுமா! ஐந்து மாதக் குழந்தையாய் இருக்கும்போதே, குடும்பத்துடன் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது கற்பூர ஆரத்தி கண்டு கலகலவென்று சிரித்திருக்கிறார்

இராமலிங்கருக்குப் பன்னிரண்டு வயது. ஒரு சமயம் தமையனார் உடல் உபாதை காரணமாய் ஆன்மிகச் சொற்பொழிவுக்குச் செல்ல இயலவில்லை.தாம் வர இயலாத காரணத்தைக் கூட்டத்தினருக்குத் தெரிவிக்கும்படி இராமலிங்கரை அனுப்பி வைத்தார்.இராமலிங்கரோ ஞானசம்பந்தரின் தேவாரப் பாடலொன்றுக்கு அருமையாய் விளக்கம் அளித்து விட்டுத் திரும்பினார்.அதன் பிறகே தம்பியின் அருட்டிறம் அண்ணனுக்குப் புரிந்தது. அதுமுதல் இராமலிங்கர் அவருடைய விருப்பம்போல் செயல்பட அண்ணன் விட்டுவிட்டார்.வீட்டிலேயே தனியறையில் கண்ணாடி வைத்து தீப ஒளியில், கற்பூரச் சுடரில் இறைவனை வணங்கி வந்தார் இராமலிங்கம்.முருகன் புகழ் கூறும் ‘தெய்வமணிமாலை யே அவர் பாடிய முதல் நூல். அவர் பாடிய மொத்தப் பாடல்கள் நாற்பதாயிரம். அவற்றை அவருடைய பிரதான சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் தொகுத்துப் பதிப்பித்தார்.திருவொற்றியூர் தியாகேசப் பெருமானிடம் இராமலிங்கர் ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி கோயிலிலேயே தியானத்தில் மூழ்கிவிடுவார்.

ஒரு முறை வீட்டுத் திண்ணையில் பசியோடு வருந்திய இராமலிங்கரின் பசி தீர்க்க வடிவுடையம்மையே நேரில் வந்தார். அது அகால நேரம் இராமலிங்கரின் தமக்கையார் உருக்கொண்டு வந்த அம்மை அவருக்கு உணவளித்தச் சென்றார்.

அவர் இல்லறத்துறவியாகவே இருந்து வந்தார் வெள்ளை ஆடையே உடுத்தினார். ஆடம்பரங்களை அறவே வெறுத்தார்.சமத்துவம், கல்வி, தியான யோகம் இவற்றை வலியுறுத்தினார். உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்தினர். சன் மார்க்க சங்கம், சத்திய ஞானசயை, அறக் கூழ்ச்சாலை என்று அவர் தோற்றுவித்த ஆன்மிகப் பணிகள் இன்றும் வடலூரில் நடந்து வருகின்றன

 வள்ளலார் இறப்பு

தண்ணீரில் விளக்கெரித்தது போல் சித்துக்கள் பலவும் செய்த இராமலிங்கர் 3.1.1874 வெள்ளி இரவு வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சொருப சமாதியானார்.

திரு.விஜய் பாபு


Share it if you like it