சேலத்தில் உலக அதிசயம்!

சேலத்தில் உலக அதிசயம்!

Share it if you like it

சேலத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் முத்துநடராஜன். இவர், புத்திரகவுண்டன்பாளையத்தில் 60 ஏக்கர் நிலம் வாங்கி, பிளாட் போட்டு விற்பனை செய்தார். பின்னர், அந்த இடத்தில் முருகன் சிலை அமைக்க முடிவு செய்தவர், அதற்காக 2 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கினார். மேலும், அந்த சிலையை மலேசியாவிலுள்ள உலகிலேயே உயரமான 140 அடி உயரம் கொண்ட பத்துமலை முருகன் சிலையைவிட உயரமானதாக வடிவமைக்க திட்டமிட்டார். எனவே, மலேசியாவில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜனை அழைத்து வந்தார்.

சிலை அமைக்க 3 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி பூமிபூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கியது. இதனிடையே, முத்துநடராஜன் உடல் நலக்குறைவால் 2018-ம் ஆண்டு இறந்து விட்டார். ஆனாலும், தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த அவரது மகன்கள் ஸ்ரீதர், வசந்தராஜன், ஞானவேல், மகள் பத்மாவதி உள்ளிட்ட குடும்பத்தினர் முருகன் சிலையை அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணி நிறைவடைந்த நிலையில், இன்று காலை 10:30 மணியளவில் உலகிலேயே உயரமான இந்த 146 அடி உயர முத்துமலை முருகன், மஹா கணபதி உள்ளிட்ட அறுபடை முருகன் ஆகிய சன்னதிகளில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த உயரமான முருகன் சிலைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இந்த சிலை சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. முத்துமலை முருகனின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றப்பட்டிருக்கிறது. சுவாமி பஞ்சவர்ண நிறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் தரிசனம் செய்யலாம் என்பது சிறப்பம்சமாகும்.


Share it if you like it