சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா!

சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா!

Share it if you like it

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி தலங்களில் முதன்மையானதாகும். இக்கோயிலில் சாதாரணமாகவே செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவிழா காலங்களில் கூட்டம் கட்டுக்கடங்காது. இக்கோயில் திருவிழாக்களில் மாசி மாதம் தொடங்கும் பூச்சொரிதல் விழாவும், சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டமும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இதிலும், பூச்சொரிதல் விழா பெண்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பக்தர்களின் நலனுக்காக 28 நாட்களுக்கு அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம்.

ஆகவே, இந்த சமயத்தில் பெண் பக்தர்களும் வீடுகளில் காப்புக்கட்டி, தெருவெங்கும் கோலமிட்டு, விரதமிருந்து அம்மனை வழிபடுவது வழக்கம். மேலும், அம்மன் பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வணங்குவது வழக்கம். இந்த பூச்சொரிதல் விழா ஆண்டுதோறும் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) அமைப்பு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், ஏராளமான ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், 13-வது ஆண்டாக வி.ஹெச்.பி. சார்பில் நிகழாண்டும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடந்தேறியது. இதில், திருச்சி டவுன், ஸ்ரீரங்கம், சமயபுரம், அந்தநல்லூர், உறையூர், மணப்பாறை, மாங்கனாப்பட்டி மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்ரீரங்கம் முதல் சமயபுரம்வரை பாதயாத்திரையாக வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை வி.ஹெச்.பி. அமைப்பின் மாநில துணைத் தலைவர் டாக்டர் பத்மாவதி, மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன், மாநில பஜ்ரங்தள் அமைப்பாளர் பீமாராவ், மாநில செய்தித் தொடர்பாளர் ஆறுமுகக்கனி, மாநில துர்காவாகினி அமைப்பாளர் லாவண்யா, மாநில மாத்ரு சக்தி அமைப்பாளர் சாவித்திரி, மாநில கோரக்ஷா அமைப்பாளர் சசிக்குமார், திருச்சி மாவட்ட வி.ஹெச்.பி. செயலாளர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர். இவ்விழாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில, மாவட்ட, வட்ட, ஒன்றிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.


Share it if you like it