சிவகார்த்திகேயனுக்காக பாடிய உலகப் புகழ் ‘சிறிய’ பாடகர்!

சிவகார்த்திகேயனுக்காக பாடிய உலகப் புகழ் ‘சிறிய’ பாடகர்!

Share it if you like it

நடிகர் சிவகார்த்திகேயனுக்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் உலகப் புகழ் பெற்ற மிகச்சிறிய பாடகர் அப்து ரோசிக்.

தஜிகிஸ்தான் நாட்டின் பஞ்சகண்ட் மாவட்டத்திலுள்ள கிஷ்தர்வா என்கிற கிராமத்தில், 2003-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி சாதாரண தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர் அப்து ரோசிக். இவரது பெற்றோரைப் பற்றிய முழு விவரங்கள் இதுவரை தெரியவில்லை. அப்து ரோசிக்கும் சொன்னதில்லை. இவருக்கு சிறுவயதிலேயே எலும்பு சம்பந்தப்பட்ட வியாதியால் பாதிக்கப்பட்டார். ஆனால், அவரது பெற்றோரிடம் வசதி இல்லாததால், அவருக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக, அவரது உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு குள்ள மனிதரானார். தற்போது 18 வயதாகும் அப்து ரோசிக்கின் எடை வெறும் 17 கிலோதான். உயரம் 3 அடி 3.37 இன்ச்தான்.

இவர் தாஜிக் ராப் பாடல்களை பாடுவதில் வல்லவர். இதனால், இவர் ‘மிகவும் சிறிய’ பாடகர் என்ற பெயரை பெற்றார். இவரது யூடியூப் சேனலுக்கு 350K சந்தாதாரர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது, துஷான்பே நகருக்கு குடிபெயர்ந்திருக்கிறார். அப்து ரோசிக்கின் திறமையை முதன் முதலில் அங்கீகரித்தவர் பரோன் என்பவர்தான். இவர்தான் அப்து ரோசிக்குக்கு நிதியுதவி அளித்து பாடல்கள் பாடும்படி ஊக்குவித்தவர். அதேபோல, அப்து ரோசிக் இசைத்தொழிலை தொடர, அவரது தந்தை வலியுறுத்தி அனுமதி பெற்றுக் கொடுத்தவரும் இவர்தான். மேலும், தனது 16 வயதில் வெறும் 12 எடை இருந்த அப்து ரோசிக் இன்று 17 கிலோவாக எடை உயர, மருத்துவ உதவிகளை செய்ததும் பரோன்தான். இதன் காரணமாக தற்போது, உலகப் புகழ்பெற்ற பாடகராக வலம் வருகிறார் அப்து ரோசிக்.

இந்த நிலையில்தான், அப்து ரோசிக்குக்கும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் தொழில் ரீதியிலான நட்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, தனது மகள் திருமணத்துக்கு அப்து ரோசிக்குக்கு அழைப்பு விடுத்திருந்தார் ரகுமான். இதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 6-ம் தேதி சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமணத்தில் அப்து ரோசிக்கால் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே, நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார் அப்து ரோசிக். இதையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அப்து ரோசிக் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்று, அவரை சந்தித்தார். அப்போது, சிவகார்த்திகேயனுக்காக ஒரு பாடல் பாடும்படி, உடனிருந்தவர்கள் கேட்டுக்கொள்ளவே, பாடல் பாடி அசத்தி இருக்கிறார் அப்து ரோசிக். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோதான் தற்போதுதான் வைரலாகி வருகிறது.


Share it if you like it