இப்படியே போனால் விரைவில் தமிழ்நாடும் விற்பனைக்குத்தான்!?

இப்படியே போனால் விரைவில் தமிழ்நாடும் விற்பனைக்குத்தான்!?

Share it if you like it

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டிய 138 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்களை 61 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 2,500 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவுள்ள அனைத்து லே-அவுட்களிலும் மொத்தப்பரப்பளவில் 10 சதவிகித இடத்தை பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கு விலக்கு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் கொண்டு வரப்பட்டன. இதன்படி, 3,000 சதுர மீட்டருக்கு உட்பட்ட லே-அவுட்களுக்கு திறந்த வெளியிடம் ஒதுக்க வேண்டியதில்லை. 3,000 சதுர மீட்டரிலிருந்து 10,000 சதுர மீட்டர் வரையிலான பரப்பளவு திட்டங்களுக்கு 10 சதவிகித இடத்தை ஒதுக்கலாம். அல்லது அந்த நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை அரசுக்குச் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டபோதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் மரங்கள் வைக்கவும், பூங்கா அமைக்கவும், விளையாட்டு மைதானம் அமைக்கவும் இடம் இருக்காது என்று கூறினார்கள். எனினும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படவில்லை. இந்த சூழலில், இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த 2019 பிப்ரவரி மாதம் முதல் 2021 நவம்பர் மாதம்வரை தமிழகத்தில் எத்தனை லே-அவுட்களில் எவ்வளவு ஏக்கர் பரப்புள்ள திறந்த வெளியிடத்துக்கு தானப்பத்திரத்துக்கு பதிலாக வழிகாட்டி மதிப்பு வாங்கப்பட்டது என்ற விபரங்களை, கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரியிருந்தார்.

இதற்கு, 25 மாவட்டங்களில் இருந்து தகவல் வந்திருக்கிறது. இதில்தான், 34 மாதங்களில் ஒப்புதல் வழங்கப்பட்ட 1,367 லே-அவுட்களில் 219 லே-அவுட்களிலும், 194 பெரிய கட்டடங்களில் 63 கட்டடங்களிலும் மட்டுமே 10 சதவிகித திறந்த வெளியிடம் 110 ஏக்கர் தானமாக வாங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,148 லே-அவுட்களிலும், 131 கட்டடங்களிலும் ‘திறந்த வெளியிடம்’ ஒதுக்குவதற்குப் பதிலாக, 138 ஏக்கர் 31 சென்ட் இடத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பாக 60.83 கோடி ரூபாய் அரசுக்குச் செலுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவை அமைப்பதற்கான அரசின் இடம், அதே அரசால் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 31,37,77,925 ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, தேனியில் ஓரிடத்தில் 4 சென்ட் இடத்துக்குப் பதிலாக வழிகாட்டி மதிப்பாக வெறும் 1,500 ரூபாய் மட்டும் செலுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், சேலத்தில் மாநகரப் பகுதியில் 6 சென்ட் இடத்துக்குப் பதிலாக 1.94 கோடி ரூபாயும், கோவையில் 16 சென்ட் இடத்துக்குப் பதிலாக 1.47 கோடி ரூபாயும் வழிகாட்டி மதிப்பாக அரசுக்குச் செலுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அந்த இடங்களின் மதிப்பு இதை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, எல்லா இடங்களையும் அரசே விற்று விட்டால் எதிர்காலத்தில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மரங்கள் வைக்க இடம் எதுவுமே இருக்காது. எனவே, இந்த விதிமுறையை மாற்றி 10 சதவிகித இடம் ஒதுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டியது அவசர அவசியம்.


Share it if you like it