2.23 கோடி டன் நிலக்கரி கையிருப்பு: திசை திருப்பும் தி.மு.க., காங்கிரஸ்!

2.23 கோடி டன் நிலக்கரி கையிருப்பு: திசை திருப்பும் தி.மு.க., காங்கிரஸ்!

Share it if you like it

தமிழகத்தில் நிலவும் மின்தடைக்கு நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணம் என்று மத்திய அரசு மீது பழியை தூக்கிப்போட்டு வருகின்றன தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும். ஆனால், 2.23 கோடி டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தி.மு.க.வின் பித்தலாட்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக 6 முதல் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் சொல்லொனாத் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். மின்வெட்டை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் மின்தடை என்பது அறவே இல்லை என்பதோடு, மின்மிகை மாநிலமாகவும் தமிழகம் இருந்து வந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே மீண்டும் மின்தடை தொடங்கி விட்டது. இதன் காரணமாக, தி.மு..க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

2006 – 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது இப்படித்தான் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைவதற்கு இந்த மின்தடைதான் முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. அப்போது, பி.ஜி.ஆர். எனர்ஜி என்கிற நிறுவனத்துக்கு மின்வாரிய ஒப்பந்தங்களை வழங்கி இருந்தது தி.மு.க. அரசு. அதேபோல, தற்போதும் அதே பி.ஜி.ஆர். நிறுவனத்துக்குத்தான் மின்சார வாரிய ஒப்பந்தங்களை தி.மு.க. அரசு வழங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கும் என்பதோடு, மேன் பவர், தொழில்நுட்ப கட்டமைப்பு இல்லாத நிறுவனம் என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆகவே, தமிழகத்தில் மீண்டும் மின்தடை ஏற்படும் என்று அடித்துச் சொன்னார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

அதேபோல, தற்போது தமிழகத்தில் கடும் மின்தடை நிலவி வருகிறது. ஆனால், இந்த மின்தடைக்கு காரணம், நிலக்கரி தட்டுப்பாடுதான். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை. அதேபோல, தென்மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மின்சாரத் தொகுப்பையும் மத்திய அரசு வழங்கவில்லை என்று தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டின. ஆனால், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்தான் என்பது போல, நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு. தற்போது 2.23 கோடி டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்திருக்கிறார். இதனால், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, தமிழக்த்தின் மொத்த மின்தேவை 16,151 மெகாவாட்தான். ஆனால், தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் 18,751 மெகாவாட். எனவே, இருக்கும் அணுமின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், நீர் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் முறையாக மின்சார உற்பத்தி செய்தாலே தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகிவிடும். தவிர, அண்டை மாநிலங்களுக்கும் நம்மால் மின் சப்ளை செய்ய முடியும். போதாக்குறைக்கு, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு புதிய யூனிட்களும் செயல்பாட்டு வந்திருக்கின்றன. இவற்றின் மூலமும் கூடுதல் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கு தகுதியான மின் உற்பத்தி நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு நிலக்கரி பற்றாக்குறை, மத்திய அரசு மின்தொகுப்பை வழங்கவில்லை என்று மத்திய அரசு மீது பழிபோடுவதிலேயே குறியாக இருக்கிறது தி.மு.க. அரசு. இன்று நேற்றல்ல, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுநவதையும், மத்திய அரசு மீது பழிபோடுவதையுமே வழக்கமாக வைத்திருக்கிறார்கள் உ.பி.ஸ்கள். அந்த வகையில், தற்போது மின்தடைக்கும் மத்திய அரசு மீது பழிபோட்டு வருகிறார்கள். ஆகவே, ஆடத்தெரியாத பொம்பளை தெரு கோணலா இருக்குன்னு சொன்னாலாம் என்கிற கதையாக, மாநிலத்துக்கான மின்தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத தி.மு.க. அரசு, மத்திய அரசு மீது குறைகூறி வருகிறது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.

blank


Share it if you like it