தெலங்கானா முதல்வர் மகளிடம் சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி!

தெலங்கானா முதல்வர் மகளிடம் சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி!

Share it if you like it

மதுபான ஊழல் தொடர்பாக, தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் சி.பி.ஐ. போலீஸார் சுமார் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி நடந்துவருகிறது. இந்த சூழலில், ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை எளிதாக்கி, தனியார் மதுபானக் கடைகளுக்கு அனுமதியும், சலுகைகளும் வழங்கியது. இந்த விவகாரத்தில் மிகப்பெரும் ஊழல் அரங்கேறி இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. ஆகவே, மதுபான ஊழல் விவகாரம் டெல்லி அரசியல் அரங்கைக் கலக்கி வருகிறது.

இந்த நிலையில்தான், மதுபான ஊழல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, இந்த விவகாரத்தில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. தலைவர்கள் பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் கடந்த ஆகஸ்டு மாதம் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், மதுபான ஊழல் வழக்கில் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, கவிதா சி.பி.ஐ. விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

அதாவது, இந்த வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்த ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கவிதாவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ரிப்போர்ட்டில், “இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சரத் ரெட்டி, கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படும் சவுத் குரூப்பிடம் இருந்து, விஜய் நாயர் மூலம் அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் கடந்த மாதம் 25-ம் தேதி சி.பி.ஐ. 7 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இது தொடர்பாக அவருக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில், கவிதாவிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டுக்கு நேரில் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்துக்கு, டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தனர்.

இவர்கள்தான் கவிதாவிடம் சுமார் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி இருக்கிறார்கள். பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதில்களை பெற்று அதிகாரிகள் பதிவு செய்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 6.30 மணிக்குத்தான் முடிந்தது. விசாரணையை முடித்துக் கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டனர். இந்த விசாரணையையொட்டி கவிதா வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.


Share it if you like it