தி.மு.க. பொறுப்பாளர் கொலை மிரட்டல்: பெண் கவுன்சிலர்கள் தர்ணா!

தி.மு.க. பொறுப்பாளர் கொலை மிரட்டல்: பெண் கவுன்சிலர்கள் தர்ணா!

Share it if you like it

வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் விவகாரம் தொடர்பாக, தி.மு.க. பொறுப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் பாதியிலேயே முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் 9 உறுப்பினர்களை தேர்வு செய்ய தி.மு.க. சார்பில் 9 பேர் கொண்ட பட்டியல் மாவட்ட தலைமையால் வெளியிடப்பட்டது. ஆனால், இப்பட்டியலை எதிர்த்து 3 தி.மு.க. கவுன்சிலர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதாவது, 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவுக்கு, 12 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இத்தேர்தலில் தி.மு.க. அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 3 பேரும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

தேர்தல் நடந்து முடிந்த பிறகு, மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நடந்தது. மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்து, தீர்மானங்களை முன்மொழிந்தார். பின்னர், நெல்லை மண்டலத் தலைவர் மகேஸ்வரி எழுந்து, மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு வேட்பாளர்கள் அறிவிப்பு தொடர்பாக மேயர் அழைப்பின் பேரில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு சென்றபோது, எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.

மேலும், திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசில்லா, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர்கள் கோகுலவாணி, அனார்க்கலி ஆகியோரும் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அதேபோல, கவுன்சிலர்கள் ரவீந்தர், கிட்டு ராமகிருஷ்ணன், உலகநாதன், மாரியப்பன் உள்ளிட்டோரும் மேயர் மற்றும் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரின் செயல்பாடுகளை கண்டித்து கடுமையாக பேசினர். மேயருக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பினர். இதனால் கூட்ட அரங்கம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

அப்போது, ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, ‘வார்டு கோரிக்கைகள் தொடர்பாக மட்டும் இங்கு பேசுங்கள். அரசியல் பிரச்னையை இங்கு பேசக்கூடாது. வெளியே சென்று பேசுங்கள்’ என்று கூறினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூவும் கவுன்சிலர்களை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒன்றிணைந்து கோஷங்களும் எழுப்பினர். இதையடுத்து மாநகராட்சி கூட்டத்தை முடித்து வைப்பதாக கூறிவிட்டு மேயர் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதனால், ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மேயரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதுடன் கூட்ட அரங்கை விட்டு வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் பாதியிலேயே முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it