பாவ யாத்திரையா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

பாவ யாத்திரையா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

Share it if you like it

பா.ஜ.க.வினர் நடத்துவது “பாவ யாத்திரை” என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த நிலையில், பாவங்களை செய்ததே தி.மு.க. குடும்பம்தான் என்று அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 168 நாட்கள் 1,700 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. கடந்த 28-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து இந்த நடைப்பயணம் துவங்கி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் அறிமுக கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின், அண்ணாமலையின் பாத யாத்திரையை 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திலும், தற்போது மணிப்பூரிலும் நடந்த வன்முறையின் பாவத்தை கரைக்க நடத்தும் ‘பாவ யாத்திரை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “உள்துறை அமைச்சர் அமித் ஷா புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த “என் மண், என் மக்கள்” நடைபயணம், தமிழக முதல்வரை பாவ யாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாக கலங்கடித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், தி.மு.க. முதல் குடும்பத்தின் ‘நிதி’களை பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் தி.மு.க. அரசு இன்று கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக்கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால், அது தி.மு.க.வின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். தி.மு.க.வினர் இவற்றை பார்த்து வாய்மூடி மௌன பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவை பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன. 2009-ம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.

பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாவயாத்திரை செய்து ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it