செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, துள்ளம் என்ற ஊரில், விருத்தாசல முதலியார்- சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக (திரு.வி.க.) திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார், ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள், 1883 ஆம் ஆண்டு பிறந்தார்.
கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப் பயிற்சியும் பெற்றவர்.
தொடக்கத்தில், தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னை ராயப்பேட்டையில் தங்கி, தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார்.
படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார்.
1906-ம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார்.
பின்னர், 1909-ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது.
1916 -1917 வரை, ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்தார்.
1918 ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் உரிமைக்காக போராட தொடங்கினார்.
தென் இந்தியாவின் முதல் தொழிலாளர் நல சங்கத்தைத் துவக்கினார்.
“தேசபக்தன்” என்ற பத்திரிகையில், அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
1920 ஆம் ஆண்டு “நவசக்தி” என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி, ஆசிரியராக இருந்து, நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
தமிழ் இலக்கியங்களைப் பற்றி வாரம் தோறும் “நவசக்தி” வார இதழில் தொடராக எழுதினார்.
இராமலிங்க அடிகளாரை பற்றி நிறைய புத்தகங்களை இயற்றினார்.
“மனித வாழ்க்கையும் காந்தியும்”, “பெண்ணின் பெருமை” என 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார்.
சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு, பல நூல்களை எழுதி உள்ளார்.
திருக்குறள், பெரிய புராணம் குறித்து நிறைய உரைகளை இயற்றி உள்ளார்.
தமிழக காங்கிரஸின் தூண்களில் இவரும் ஒருவர்.
1926 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார். அப்போது நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்து, தமிழக மக்களுக்கு, சுதந்திர வேட்கையை ஊட்டினார்.
நாடு விடுதலை அடையும் வரை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தன்னுடைய 71 ஆம் வயதில், 1953 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று, இறைவனடி சேர்ந்தார்.