‘பாரத் மாதா கி ஜெய்!’ பாக்., பங்களாதேஷிகள் கோஷம்!

‘பாரத் மாதா கி ஜெய்!’ பாக்., பங்களாதேஷிகள் கோஷம்!

Share it if you like it

உக்ரைன் போரில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, இந்தியக் கொடியை கையில் ஏந்தி, பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டபடி, உக்ரைன் நாட்டின் எல்லைகளை கடந்து வருகிறார்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் துருக்கியைச் சேர்ந்த மக்களும், மாணவர்களும்.

நேட்டோ நாடுகள் அமைப்பில் இணையும் உக்ரைன் நாட்டின் விருப்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது போர் தொடுத்திருக்கிறது ரஷ்யா. இதையடுத்து, உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டார் பாரத பிரதமர் மோடி. அவ்வாறு வெளியேறி அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த இந்தியர்களை, விமானம் மூலம் மீட்டு அழைத்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், இதுவரை 9 விமானங்கள் வெற்றிகரமாக இந்தியர்களை மீட்டு வந்திருக்கின்றன. மேலும், 7 விமானங்கள் புறப்பட்டிருக்கின்றன. தவிர, 26 விமானங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அதோடு, விமானப்படையும் மீட்புப் பணியில் ஈடுபடும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல வேண்டுமானால் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் முக்கியம். தவிர, தற்போது கொரோனா வழிகாட்டு முறைகள் நடைமுறையில் இருப்பதால், தடுப்பூசி சான்றிதழும் தேவைப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் அண்டை நாடுகளுக்குச் செல்வது என்பது கடினமாக காரியம். ஆகவே, இந்த இக்கட்டான நிலையில் இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்க வேண்டாம் என்று உக்ரைனின் அண்டை நாடுகளிடம் மத்திய அரசு கேட்டிருந்தது. இதற்கு அந்நாடுகளும் சம்மதம் தெரிவித்ததால், இந்தியர்கள் அனைவரும் கையில் இந்தியக் கொடியை ஏந்தியபடி அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் கையில் இந்தியக் கொடியை ஏந்தியபடி, பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியபடி அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள். இதுகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் போன்ற நாடுகள் அந்நாட்டு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவி ஒருவர், பாகிஸ்தானில் பிறந்ததற்கு பதிலாக இந்தியாவில் பிறந்திருக்கலாம். இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புகிறார்கள். மேலும், அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவுகள் கிடைக்கின்றன. ஆனால், எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்று தனது குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, இந்திய தேசியக் கொடி கிடைக்காததால் பாகிஸ்தான், துருக்கியைச் சேர்ந்த 2 மாணவர்கள், தாங்கள் தங்கியிருந்த குடியிருப்புகளில் இருந்த திரைச்சீலையில் இந்தியக் கொடியின் வண்ணத்தை தெளித்து, அக்கொடியை பிடித்துக் கொண்டு இந்தியர்களின் உதவியுடன் ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரை வந்தடைந்திருக்கிறார்கள். அவர்கள், இந்தியக் கொடியாலும், இந்தியர்களாலும்தான் தாங்கள் எளிதாக எல்லையை கடக்க முடிந்தது என்று கூறியிருக்கிறார்கள். இது தொடர்பான செய்திகளும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Share it if you like it

One thought on “‘பாரத் மாதா கி ஜெய்!’ பாக்., பங்களாதேஷிகள் கோஷம்!

Comments are closed.