லாவண்யா விவகாரம்: மத மாற்றம் இல்லையாம்… முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திருமா!

லாவண்யா விவகாரம்: மத மாற்றம் இல்லையாம்… முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திருமா!

Share it if you like it

மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மத மாற்றம் நடக்கவில்லையாம். ஹிந்து அமைப்புகள்தான் வெறுப்புப் பிரசாரம் செய்கிறதாம். இப்படிச் சொல்லி இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தனித் தொகுதியின் எம்.பி.யுமான திருமாவளவன்தான்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையாம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம். இவரது மகள் லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்திருக்கும் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். நன்றாகப் படிக்கும் இந்த மாணவி, 10-ம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவி லாவண்யாவை தங்களது மதத்துக்கு மாறும்படியும், மேல் படிப்பு செலவுகளை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் பள்ளி நிர்வாகம் ஆசைகாட்டி இருக்கிறது. இதற்கு லாவண்யா மறுத்துவிடவே, அவரது பெற்றோரை வரவழைத்து பேசியிருக்கிறார்கள். அவர்களும் மதம் மாற மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம், பொங்கல் விடுமுறைக்குக் கூட மாணவி லாவண்யாவை வீட்டுக்கு அனுப்பாமல், பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்வது, விடுதியை சுத்தம் செய்வது, பாத்திரங்கள் விளக்குவது என வேலை மேல் வேலையாகக் கொடுத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

இதனால், கடும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்த மாணவி லாவண்யா, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உடனே, பக்கத்திலிருந்த கிளினிக்கில் மாணவிக்கு மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்த பள்ளி நிர்வாகம், அவரது பெற்றோரை வரவழைத்து எதுவுமே நடக்காததுபோல் வீட்டுக்கு அனுப்பி விட்டது. மாணவியின் உடல்நிலை மோசமடையவே, தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் அவரது பெற்றோர். அப்போதுதான், மாணவி லாவண்யா விஷம் குடித்த விஷயமே தெரியவந்திருக்கிறது. மருத்துவமனையில் மாணவி உயிருக்குப் போராடிய நிலையில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், பள்ளி நிர்வாகம் தன்னை மதம் மாறச் சொன்னதாகவும், தான் மறுத்து விட்டதாகவும், எனவே, தனது பெற்றோரை வரவழைத்து தனது முன்னிலையிலேயே மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யாவும் உயிரிழந்து விட்டார். ஆனால், போலீஸ் தரப்பிலோ முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல, மதம் மாறச் சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ரவளி பிரியா கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான், போலீஸாரின் கூற்றுக்கு ஒத்து ஊதுவதுபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், மத மாற்றம் நடக்கவில்லை. ஆனால், இந்து அமைப்புகள்தான் மதமாற்றம் நடந்ததுபோல பொய்யானதொரு குற்றச்சாட்டை பரப்பி வருகின்றன. இத்தகைய வெறுப்பு பிரசாரத்தைத் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னதோடு, சனாதன சக்திகளையும் வேரறுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதாவது, சனாதன தர்மம் என்பது ஹிந்து தர்மம். அந்த ஹிந்து தர்மத்தை வேரறுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருப்பது, அவரது திமிர்த் தனத்தையும், அகம்பாவத்தையும் காட்டுவதாக இருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் ஹிந்துக்களும், ஹிந்து அமைப்பினரும்.

திருமாவளவன் ஆரம்பத்திலிருந்தே ஹிந்துக்களையும், ஹிந்து தர்மத்தையும், ஹிந்து கோயில்களையும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். குறிப்பாக, உயர் ஜாதி பெண்களை பற்றி நா கூசும் வார்த்தைகளால் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல, ஹிந்து கோயில்களை பற்றி அவர் செய்த விமர்சனம், ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஆனாலும், தனது வாயத்துடுக்கை திருமாவளவன் நிறுத்தவில்லை. ஆகவே, திருமாவளவன் சிறுபான்மையினர் மீது காட்டும் அக்கறையில் துளியாவது தான் சார்ந்த ஹிந்து மதத்தின் காட்ட வேண்டாமா? என்று குமுறுகிறார்கள் ஹிந்துக்கள்.


Share it if you like it