ஆங்கிலேயரிடம் அகப்படாமல் தனக்கு தானே உயிரை மாய்த்துக் கொண்ட வீரன் வேலுத்தம்பி தளவாய்

ஆங்கிலேயரிடம் அகப்படாமல் தனக்கு தானே உயிரை மாய்த்துக் கொண்ட வீரன் வேலுத்தம்பி தளவாய்

Share it if you like it

வேலுத்தம்பி தளவாய்

வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765–1809), திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மகராஜா பலராம வர்மா குலசேகரப் பெருமாள் மன்னராக வீற்றிருந்த காலத்தில், தளவாய் மற்றும் படை தளபதியாக இருந்தவர். “வேலுத்தம்பி” என அறியப்பட்ட இவர், நாஞ்சில் நாட்டு களரி வீரன் ஆவார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போரிட்டவர்.

திருவிதாங்கூர் மாமன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் “செண்பகராமன்” பட்டம் பெற்ற உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் வேலுத்தம்பி. இவரது குடும்ப பெயர் “இடப்பிரபு குலோத்துங்க கதிர்குலத்து முளப்படை அரசனான இறையாண்ட தலக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன்” என்பதாகும். தலக்குளத்து வேலுத்தம்பி என பரவலாக அறியப் பட்டார். இவருடைய சகோதரன் பத்மநாபன் தம்பி ஆவார்.

தமிழ், உருது ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். யாருக்கும் அஞ்சாத வீரம், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யும் தைரியம். இளம் வயதிலேயே களரி கலை திறமை கொண்டு, சுற்று வட்டார பகுதிகளில் எவரும் வெல்ல முடியாத தலக்குளம் மண்ணின் வீரனாக காணப் பட்டார்.

திருவிதாங்கூர் மன்னர் பலராம வர்மா, கி.பி.1802-ம் ஆண்டு, வீரத்திலும் திறமையிலும் சிறந்து விளங்கிய நிதி அமைச்சராக இருந்த வேலுத்தம்பியை, உயர்ந்த பதவியான தளவாய் ஆக நியமனம் செய்தார். வேலுத்தம்பி திருவிதாங்கூரின் தளவாய் (அ) திவான் பதவியை ஏற்ற பின்னர், நாட்டின் வருமானம் குறைய ஊழலே காரணம் என கண்டுபிடித்தார். கடுமையான சட்டங்களை கொண்டு வந்து, ஊழலை முற்றிலுமாக ஒழித்தார். ஒரு வருடத்திற்குள் நாட்டில் அமைதியும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட்டது. மக்களுக்கு நியாயமான வரியை விதித்தார். ஆங்கில அரசுக்கு முறையான கப்பத் தொகையும் செலுத்தி வந்தார். ஆரல்வாய்மொழி, உதயகிரி, பத்மனாபபுரம் மற்றும் இரணியல் கோட்டைகளை பலப்படுத்தினார். கிராமங்களில் ஆயுத பயிற்சி மையங்களை நிறுவினார். பல ஆலயங்களை சீரமைத்தார். வேலுத்தம்பி பிரிட்டிஷ் அதிகாரியான கர்னல் மெக்காலேவிடம் சிறந்த நட்பைக் கொண்டிருந்தார். இதனால் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்திடமும் வேலுத்தம்பிக்கு செல்வாக்கு ஏற்பட்டது.

தளவாய் வேலுத்தம்பியின் ஆட்சி நேர்மையாகவும், அதே நேரம் மிகவும் கடுமையாகவும், கடினமாகவும் இருந்தது. குற்றம் புரிபவர்களுக்கு கொடுமையான தண்டனைகளை வழங்கினார். அரசுக்கு எதிராக செயல்படுபவரின் வலது கையின் விரல்கள் துண்டிக்கப் பட்டது. களவு மற்றும் குற்றச் செயல்கள் செய்பவரின் காது மற்றும் மூக்கு அறுக்கப் பட்டது. மக்களை துன்புறுத்தினாலோ, பெண்களை மானபங்கப் படுத்தினாலோ பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி மற்றும் உயிரோடு மரத்தில் ஆணி அறைந்து தலை துண்டிக்கப் பட்டு கடலில் வீசப் பட்டது.

வேலுத்தம்பி தளவாய் என்ற பெயரைக் கேட்டாலே திருவிதாங்கூர் சமஸ்தானமே நடுங்கும் அளவிற்கு அவரது கடும் நடவடிக்கைகள் இருந்தது. வேலுத்தம்பியின் இந்த கடுமையான நடவடிக்கைகளைக் கண்டு சில ஆங்கில அதிகாரிகளே மிரண்டனர். ஆனால், வேலுத்தம்பியின் ஆட்சி திருவிதாங்கூர் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. நாட்டில் களவும், குற்ற செயல்களும் குறைந்தன. மக்கள் தைரியமாக வெளியில் நடமாடத் தொடங்கினர். பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருந்தனர். வேலுத் தம்பியின் கடுமையான நடவடிக்கைகளை மற்ற அமைச்சரான குஞ்சுனிலம் பிள்ளை எதிர்த்தார். வேலுத்தம்பியைக் கவிழ்க்க சதி திட்டம் தீட்டினார். ஆனால், வேலுத்தம்பியால் இவரது திட்டம் முறியடிக்கப் பட்டது.

திருவிதாங்கூரில், கி.பி.1804-ம் ஆண்டு, நிதி நெருக்கடி ஏற்பட்டு, அரசு கம்பெனிக்குக் கொடுக்க வேண்டிய கப்பத் தொகையில் நிலுவை ஏற்பட்டது. இதனை நிவர்த்திச் செய்ய, திவான் வேலுத்தம்பி, படைகளுக்கு கொடுத்து வந்த ஊதியத்தைக் குறைக்க முடிவெடுத்தார். இதற்கு ஆங்கில அதிகாரி மெக்காலேயின் ஆதரவு இருந்தது. இதனை எதிர்த்த போர் வீரர்கள், வேலுத்தம்பிக்கு எதிராக கலவரம் செய்தனர்.

ஆங்கில அதிகாரி கர்னல் மெக்காலே திருவிதாங்கூரின் உள்நாட்டுக் கலவரத்தை சாதகமாக பயன்படுத்தி, நாட்டை கம்பெனி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர எண்ணினார். கி.பி. 1805 ஆம் ஆண்டு, திவான் வேலுத்தம்பியின் ஆதரவை பயன்படுத்தி, 1795 ஆம் ஆண்டு உடன்படிக்கையை திருத்தி, ஒரு புதிய உடன்படிக்கையை அறிவித்தார். அதன்படி திருவிதாங்கூரில் கலகம் செய்யும் படைகளை கலைக்க வேண்டும் என்றும், திருவிதாங்கூரின் வெளி பாதுகாப்பு மட்டுமின்றி உள்நாட்டு கலவரங்களிலிருந்தும் பாதுகாக்க, கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளை நாட்டிற்குள் நிறுவ வேண்டும் என்றும், இதனுடைய மொத்த பராமரிப்பு செலவுகளுக்காக வருடத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் கப்பத்தொகை கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அறிவித்தார். இதற்கு திவான் வேலுத்தம்பி ஆதரவு அளித்தார். ஆனால், ஆங்கில அரசு நேமம் எனும் இடம் வரை தங்களுடைய படையை அமைத்த பிறகு தான் இந்த உடன்படிக்கையை அறிவித்தது. வேறு வழியின்றி மன்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த உடன்படிக்கையால் கிழக்கிந்தியக் கம்பெனி, திருவிதாங்கூர் ஆட்சியில் தலையிடும் உரிமையை பெற்றது. பிரிட்டிஷ் கம்பெனி துணைப்படை நாட்டிற்குள் முகாமிட்டது. திருவிதாங்கூர் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

திருவிதாங்கூரில் 1806-ம் ரிங்கல்டூப் என்பவர் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக நாஞ்சில் நாடு வந்தார். கர்னல் மெக்காலே இவருக்கு ஆதரவு அளித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். ரிங்கல்டூப் மைலாடியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் கட்ட, அரசிடம் அனுமதி வாங்கித் தருமாறு மெக்காலேவிடம் வேண்டினார். ரிங்கல்டூப், கர்னல் மெக்காலே உதவியுடன் கொல்லம் சென்று தளவாய் வேலுத்தம்பியை சந்தித்து மைலாடியில் தேவாலயம் கட்ட அனுமதி கேட்டார். இதற்கு தளவாய் வேலுத்தம்பி எதிர்ப்பு தெரிவித்து அனுமதி வழங்க மறுத்து விட்டார். இது கர்னல் மெக்காலேவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருவிதாங்கூர் அதன் அனைத்து உள் அரசியல் குழப்பங்கள் காரணமாக, கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. திருவிதாங்கூரில் ஏற்பட்ட நிதி நெருக்கடி குறித்து முழுமையாக அறிந்திருந்தும், கர்னல் மெக்காலே உடன்படிக்கை படி கப்பம் கட்ட, வேலுத்தம்பிக்கு அழுத்தம் கொடுத்தார். நிதி நெருக்கடியால் அரசு கம்பெனிக்கு கொடுக்க வேண்டிய கப்பத்தொகையில், தொடர்ந்து நிலுவை ஏற்பட்டது. கப்பத்தொகையில் நிலுவை ஏற்பட்டதால், 1807 ஆம் ஆண்டு, கப்பத் தொகையை மேலும் உயர்த்தினார், கர்னல் மெக்காலே. ஒரு கட்டத்தில் நாட்டின் வருமானத்தில், 80 சதவீதம் கப்பமாக வசூலிக்கப் பட்டது.

நிலைமை மோசமாக, ஒருமுறை மன்னரின் நகைகளை விற்று கப்பம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மன்னர் பலராம வர்மா, மெக்காலேவை பணி இடமாற்றம் செய்ய மதராஸ் மகாணத்தின் ஆங்கில அரசின் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதினார். இந்த செய்தியால் அதிருப்தி அடைந்த மெக்காலே நிலுவையில் உள்ள மொத்த தொகையையும் உடனடியாக கட்டுமாறு திவான் வேலுத்தம்பிக்கு கட்டளையிட்டார். அதிகமான கப்பத்தொகை வேலுத்தம்பிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. நாட்டு மக்களிடம் அதிகமான வரி வசூலித்து, அதை ஆங்கில அரசுக்கு கப்பமாக கட்ட வேலுத்தம்பி கடுமையாக மறுத்தார். கப்பம் கட்டாமல் கால தாமதம் செய்தார். இதனால் மெக்காலேவிற்க்கும் – வேலுத்தம்பிக்கும் விரிசல் விழுந்தது. கப்பம் தொடர்ந்து உயர்த்தப் பட்டதை, வேலுத்தம்பி எதிர்க்க, பூசல்கள் வெடித்தன. வேலுத்தம்பி ஆங்கில மேலாதிக்கத்துக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.

வேலுத்தம்பி கம்பெனி நிர்வாகத்திற்கு எதிராக செயல்படுவதும், மயிலாடியில் தேவாலயம் கட்ட அனுமதி மறுப்பதும், மெக்காலேவிற்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது. கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் வந்து, மன்னரை சந்தித்த கர்னல் மெக்காலே, கம்பெனிக்கு எதிராக செயல்படும் வேலுத்தம்பியை தளவாயை பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்றும், அவர் சிறை சென்று ஐநூறு ரூபாய் ஓய்வூதியம் பெற்று வாழ வேண்டும் என, மன்னருக்கு கோரிக்கை விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேலுத்தம்பி, கம்பெனி நிர்வாகத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். ஆரம்பத்தில் தன்னுடன் ஒத்துழைத்த ஆங்கில அதிகாரி மெக்காலே நாட்டை கைப்பற்ற நடத்திய சூழ்ச்சியை புரிந்து கொண்டார். அதிகமான கப்பத்தொகை மற்றும் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் மெக்காலேவையும், கிழக்கிந்திய கம்பெனியையும் திருவிதாங்கூரில் இருந்து விரட்ட நினைத்தார். நாட்டையும், மக்களையும் காப்பாற்ற கம்பெனி நிர்வாகத்திற்கு எதிராக ஆயுத போர் தொடங்க முடிவு செய்தார்.

ஆங்கில கம்பெனி நிர்வாகத்திற்கு எதிராக, கி.பி.1808-ம் ஆண்டு இறுதியில், வேலுத்தம்பியின் வெளிப்படையான கிளர்ச்சி வெடித்தது. இந்நிலையில், கொச்சி அரசிற்கும் – கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே மோதல் இருந்தது. கொச்சி அரசின் தளவாயாக இருந்தவர், பாலியத் அச்சன் கோவிந்தமேனன் என்பவர். இவரும் மெக்காலேவின் நடவடிக்கைகளை எதிர்த்தார். ஆங்கில அரசின் மேலாதிக்கத்திற்கு முடிவு கட்ட, வேலுத்தம்பியின் படைகளோடு, கொச்சி தளவாய் பாலியத்அச்சன் படைகளும் இணைந்தன. படை பலம் அதிகரித்தது.

கோட்டைகள் பலப்படுத்தப் பட்டன. ஆயுதங்களும், வெடி மருந்துகளும் அதிக அளவில் சேகரிக்கப் பட்டன. வேலுத்தம்பி திருவிதாங்கூரில் உள்ள பிரெஞ்சு மற்றும் அமெரிக்கா படைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். வேலுத்தம்பியின் திட்டம் கர்னல் மெக்காலேவை கொலை செய்து, அவர் தங்கியிருக்கும் கொச்சி போல் “காட்டி” கோட்டையை கைப்பற்றுவது ஆகும். 1808 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 28 ஆம் நாள், கொச்சி கோட்டையை தாக்குமாறு, வேலுத்தம்பி ஆலப்புழையில் இருந்து படைகளுக்கு ஆணை பிறப்பித்தார். தளபதி வைக்கம் பத்மநாபப்பிள்ளை (செம்பில் அரையன்) தலைமையில், கொல்லத்தில் இருந்து கொச்சி நோக்கி மூடிய படகுகளில் விரைந்த படைகள், இரவோடு இரவாக மெக்காலே இருந்த கொச்சி கோட்டையை தாக்கியது. ஆங்கில படை வீரர்கள் பலர், வெட்டி கொல்லப் பட்டனர். கொச்சி கோட்டை சூறையாடப் பட்டது. கொச்சி மற்றும் கொல்லம் பகுதிகளில் கிளர்ச்சி வெடித்தது.

திடீரென நடந்த இந்த தாக்குதலை எதிர்பாராத மெக்காலே மற்றும் கொச்சி அரசின் அமைச்சரான குஞ்சு கிருஷ்னமேனன் ஆகியோர் கோட்டையின் நிலவறையில் மறைந்திருந்து, தக்க சமயத்தில் அங்கிருந்த கப்பலில் ஏறி, உயிர் தப்பினர். கொச்சி கோட்டையை கைப்பற்றி, கொல்லம் நோக்கி திரும்பிய படைகள் வழியில் கண்ட ஒரு ஐரோப்பிய படையை கைது செய்து, பள்ளுருத்தி ஆற்றில் வெட்டி வீழ்த்தியது. இந்நிலையில் வேலுத்தம்பி ஆலப்புழையில் இருந்து கொல்லம் திரும்பி அங்கிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தினார்.

மரணத்திலிருந்து உயிர் தப்பிய மெக்காலே, கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த, உடனடியாக கம்பெனிப் படைகளை கொல்லத்திற்கு அனுப்புமாறு, மதராஸ் கவர்னருக்கு தகவல் அனுப்பினார். மைசூரிலிருந்தும், மதராஸிலிருந்தும் 12வது மற்றும் 17வது பிரிட்டிஷ் படை பிரிவுகள், திருவிதாங்கூரின் கொல்லம் மற்றும் கொச்சி நோக்கி படையெடுத்தது. மேஜர் ஹெவிட் மற்றும் கர்னல் ஜான் சால்மர்ஸ் தலைமையில் நடந்த போர்களில், வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன.

பீரங்கி பலம் வாய்ந்த ஆங்கில அரசை எதிர்க்க, நாட்டு மக்களின் ஆதரவை பெற எண்ணிய தளவாய் வேலுத்தம்பி, 1809 ஆம் ஆண்டு, ஐனவரி மாதம் 11 ஆம் தேதி, கொல்லம் அருகே குண்டறை எனும் இடத்தில், ஆங்கில அரசுக்கு எதிராக, மக்கள் முன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் ஆங்கில அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். நம் நாட்டிற்கு வந்த வெள்ளையர்கள் நாட்டை ஆள முயற்சிப்பதும், நமது ஆலயங்களை கொள்ளையடித்து கிறிஸ்தவ தேவாலயங்களாக மாற்ற முயற்சிப்பதும், நம்மை அடிமையாக்கி அதிக வரி வசூலித்து சித்ரவதை செய்வதையும் தடுக்க, ஆங்கில கம்பெனிக்கு எதிராக, ஆயுத போர் புரிய வருமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுத்தார்.

மக்கள் மனதில் இருந்த அடிமை உணர்வை தகர்த்தெறிந்த இந்த வீர உரை, பிற்காலத்தில் “குண்டறை விளம்பரம்” என சரித்திர வரலாறு படைத்தது. குண்டறை விளம்பரம், மக்களின் ஆழ் மனதின் வீரத்தை தட்டி எழுப்பியது. அடிமை சங்கிலியை அறுத்தெறிய, மக்கள் வெள்ளம் போருக்கு தயாராகியது. திருவிதாங்கூர் முழுவதும், மக்கள் புரட்சி வெடித்தது. முறுக்கேறிய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் வேலுத்தம்பியின் தலைமையின் கீழ், அணி திரண்டனர். மீண்டும் படை பலம் அதிகரித்தது. ஆங்கில அரசுக்கு எதிராக, பல வன்முறை செயல்கள் நடைபெற்றது. பல ஆங்கில வீரர்கள், வெட்டி கொல்லப் பட்டனர். ஆங்கில படை தளங்கள் பல சிதைக்கப் பட்டன. ஆங்கில அரசின் மேல் வேலுத்தம்பிக்கு இருந்த வெறித்தனத்தை, ஆங்கில அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.

வேலுத்தம்பியின் மக்கள் படையால் அதிர்ந்த ஆங்கில அரசு, திருநெல்வேலியில் இருந்த கொடூர அதிகாரியான கர்னல் செயின்ட் லோகர் என்பவரின் தலைமையில், மாபெரும் பிரிட்டிஷ் படையை, திருவிதாங்கூரின் தெற்கு நோக்கி அனுப்பியது. துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் இதுவரை இல்லாத அளவு கொண்டு வரப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட கர்னல் லோகரின் படைகள், திருவிதாங்கூரின் தெற்கு எல்லையான ஆரல்வாய் மொழியில் முகாமிட்டது. உறுதியான ஆரல்வாய்மொழி கோட்டையை தகர்த்த ஆங்கிலப் படைகள், நாஞ்சில் நாட்டிற்குள் சீறி பாய்ந்தது. சுசீந்திரம் பகுதியில் வேலுத்தம்பியின் படைகளோடு நடந்த போரில் கோட்டாறு, நாகர்கோவில் பகுதிகளை வென்று, பிரிட்டிஷ் படைகள் முன்னேறியது.

பின்னர், வேலுத்தம்பியின் கட்டுபாட்டில் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைத்திருந்த முக்கியமான கோட்டையான “உதயகிரி” மற்றும் “பத்மனாபபுரம்” கோட்டையையும் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள், திருவனந்தபுரம் நோக்கி முன்னேறி, பாப்பனாம்கோடு பகுதியில் முகாமிட்டது.

அச்சத்தில் மன்னர் பலராம வர்மா பிரிட்டிஷ் கம்பெனியுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அடிபணிந்தார். மன்னரின் அமைதி ஒப்பந்தத்தின் படி 1809-ம் ஆண்டு மார்ச் 18-ம் நாள் திருவிதாங்கூரின் தளவாய் மற்றும் அனைத்து சர்வ அதிகாரப் பிரிவுகளிலும் இருந்து வேலுத்தம்பி நீக்கப்பட்ட இராஜசாசனம் வந்தது. உம்மிணி தம்பி புதிய தளவாய் ஆனார்.

ஆங்கில அரசுடன் கை கோர்த்த மன்னர் பலராம வர்மா, வேலுத்தம்பியை கைது செய்ய ஆணை பிறப்பித்தார். ஆங்கில அரசு வேலுத்தம்பியை உயிருடன் பிடித்து தருபவர்களுக்கு, ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு அறிவித்தது. ஒருபுறம் மன்னரின் படைகளும், மறுபுறம் பிரிட்டிஷ் கம்பெனி படைகளும் வேலுத்தம்பியை கைது செய்ய நான்கு திசைகளிலும் தேடுதல் வேட்டையை தொடங்கியது. இதனை அறிந்த வேலுத்தம்பி தனது சகோதரனுடன் புறப்பட்டு கிளிமானூர் கோட்டையில் தஞ்சம் புகுந்தார். பிரிட்டிஷ் கம்பெனிக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை பின்னர் வரும் தலைமுறைகள் அறிய வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாளை கிளிமானூர் அரச குடும்பத்தில் ஒப்படைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வேலுத்தம்பி இறுதியாக மண்ணடி பகவதி ஆலயத்தில் வந்து சேர்ந்தார். வேலுத்தம்பி மறைந்திருந்த இடத்தை கயவர்கள் ஆங்கில அரசிடம் அறிவித்தனர்.

வேலுத்தம்பி மறைந்திருந்த இடத்தை நோக்கி நெருங்கி வந்த ஆங்கிலப் படைகள், மண்ணடி பகவதி ஆலயத்தை சுற்றி முற்றுகையிட்டது. ஆங்கிலப் படைகளின் கைகளில் அகப்பட வேலுத்தம்பியின் மானம் தடுத்தது. இதற்கு மேல் போராட முடியாது, ஆங்கிலேயரிடம் கைதாக நேரும் என்று உணர்ந்த வேலுத்தம்பி, சகோதரனிடம் தன்னைக் கொல்ல வேண்டினார். அவர் மறுக்கவே தன்னுடைய குத்து வாளை எடுத்து நெஞ்சில் குத்தி இறக்கினார். ஆனால், உயிர் பிரியவில்லை. ஆலயத்தின் வெளியே நின்ற ஆங்கிலப் படைகள் ஆலய வாசலை இடித்து உள்ளே வந்தது. உடனே, சகோதரன் பத்மநாபன் தன்னுடைய வாளை எடுத்து வேலுத்தம்பியின் தலையை வெட்டி வீழ்த்தினான். மக்களின் விடுதலைக்காக ஆங்கில அரசிடம் அடங்காமல் போராடிய மாவீரன் வேலுத்தம்பியின் உடல், சகோதரன் பத்மநாப தம்பியின் பாதங்களில் பணிந்தது.

வேலுத்தம்பியின் இறந்த உடலை கைப்பற்றிய பிரிட்டிஷ் படைகள் திருவனந்தபுரம் அருகே கன்னம்மூல (தளவாக்குன்னு) என்ற இடத்தில் உள்ள மலை உச்சியின் மேல் கழுவில் ஏற்றினர். தலக்குளத்தில் வேலுத்தம்பியின் வீடு இடித்து தரை மட்டமாக்கப் பட்டது, மரங்கள் சாய்க்கப் பட்டன. வேலுத்தம்பியின் உறவினர்கள் பலர் தேடிப் பிடித்துக் கொல்லப் பட்டனர். சிலரை அந்தமானுக்கு நாடு கடத்த, கொண்டுச் செல்லப் பட்டனர், வழியில் தூத்துக்குடியில் இறக்கி வெட்டிக் கொல்லப் பட்டனர்.

வேலுத்தம்பியின் சகோதரன் பத்மநாபன் தம்பி, முக்கியப் படை தளபதியான வைக்கம் பத்மநாப பிள்ளை உள்பட பலர் கைது செய்யப்பட்டு கொல்லம், புறக்காடு மற்றும் பள்ளுருத்தி ஆகிய இடங்களில் தூக்கிலிடப் பட்டனர். கொச்சி அரசின் தளவாய் பாலியத் அச்சன் கைது செய்யப் பட்டு, 12 ஆண்டுகள் மதராஸ் சிறையிலும், பின்னர் 13 ஆண்டுகள் மும்பை சிறையிலும், அடைக்கப் பட்டு உயிர் துறந்தார். வேலுத்தம்பியின் மரணத்திற்குப் பின், போர் முடிவுக்கு வந்தது. மயிலாடியில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டப் பட்டது.


Share it if you like it