வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை: தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது!

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை: தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது!

Share it if you like it

திண்டிவனத்தில் வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்த தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அக்கட்சியினர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, போதை பொருட்கள் கடத்தல் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், ஏற்கெனவே இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதன் பிறகு, செங்கல்பட்டு அருகே சட்டவிரோதமாக சாராய ஆலை நடத்தி வந்த தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சூழலில், தற்போது விழுப்புரம் அருகே வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த தி.மு.க. கவுன்சிலரின் கணவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில், ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, காரில் வந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் திண்டிவனம் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா என்கிற மரூர் ராஜா என்பதும், தனது வீ்ட்டிலேயே சாராயம் தயாரித்து, அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதில், ஹைலைட் என்னவென்றால், ராஜாவின் மனைவி ரம்யா, திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பதுதான்.

இதையடுத்து, மரூர் ராஜாவை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், மதுவிலக்கு போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியதில், 3 கேன்களில் 105 லிட்டர் எரி சாராயம், 9 காலி கேன்கள், சாராய பாக்கெட்டுகள் தயாரிக்க பயன்படும் 6 மெஷின்கள், 2 கிலோ பாலித்தீன் பைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தி.மு.க. கவுன்சிலரின் கணவர், வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்று வந்த சம்பவம், திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி இருக்கிறது.


Share it if you like it