காலை மது விற்பனை… அமைச்சரின் அடடே விளக்கம்… அண்ணாமலை அட்வைஸ்!

காலை மது விற்பனை… அமைச்சரின் அடடே விளக்கம்… அண்ணாமலை அட்வைஸ்!

Share it if you like it

காலையில் மது விற்பனை செய்வது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்திருந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, காலையில் மது விற்பனை செய்வது குறித்தும், டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்வது குறித்தும் கூறியிருந்தார். அப்போது, காலையில் மது அருந்துபவர்களை குடிகாரர்கள் என்று அழைத்தால் தனக்கு கோவம் வரும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான், அமைச்சரின் விளக்கத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன். தூய்மைப் பணியாளர்கள், கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான தீர்வு காலையில் மது விற்பது அல்ல. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் நாள், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 425, தமிழகத்தில், தூய்மைப் பணியாளர்கள், கைகளால் கழிவுகள் அகற்றுவதைத் தடை செய்துள்ளதாகக் கூறுகிறது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் பணியின்போது 56 தூய்மைப் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர். அப்படி இருக்க, அமைச்சரோ கைகளால் கழிவுகள் அகற்றும் பணியில், மது அருந்திவிட்டு ஈடுபடச் சொல்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது. தூய்மைப் பணியாளர்கள் புனர்வாழ்வுக்கு மத்திய அரசு, குடும்பத்தில் ஒரு தூய்மைப் பணியாளருக்கு 40,000 ரூபாய், தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு 2 வருடங்களுக்கு மாதம் 3000 ரூபாய், தூய்மைப் பணி தொடர்பான சுயதொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் வரை மானியம், மருத்துவக் காப்பீடு, தூய்மைப் பணியாளர் மரணங்களைத் தடுக்க, நமஸ்தே திட்டம் என பல திட்டங்கள் தீட்டி, ஆண்டுதோறும் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது.

இத்திட்டங்களை இது வரை பயன்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசு, சாராய விற்பனையைப் பெருக்குவதில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it