கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவு!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவு!

Share it if you like it

கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று அதிகாலை காலமானார்.

கேரளா மாநிலம் புதுப்பள்ளியைச் சேர்ந்த கே.ஓ.சாண்டி – பேபி சாண்டி தம்பதிக்கு 1943-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்.தேதி கோட்டயம் குமரகத்தில் பிறந்தார் உம்மன் சாண்டி. பள்ளியில் படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டவர், 1970-ல் தனது 27-வது வயதில் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 2004-ல் ஏ.கே.ஆன்டணி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கேரள முதல்வரானார் உம்மன் சாண்டி. 2006 முதல் 2011-வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 2011-ல் மீண்டும் முதல்வரானார். 2 முறை கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பள்ளி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சாண்டிக்கு கேன்சர் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்தது. மேலும், நிமோனியா பாதிப்பால் பெங்களூருவில் சின்மயா மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு உம்மன்சாண்டி காலமானார். சாண்டி மறைவைத் தொடர்ந்து, இன்று கேரளா மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மதியம் 2 மணி அளவில் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்படும். தொடர்ந்து, நாளை மறுநாள் சொந்த ஊரான புதுப்பள்ளியில் இறுதிச் சடங்கு நடைபெறும்.


Share it if you like it