ஒருதலைக் காதல்: மாணவி மீது துப்பாக்கிச்சூடு!

ஒருதலைக் காதல்: மாணவி மீது துப்பாக்கிச்சூடு!

Share it if you like it

பீகாரில், ஒருதலைக் காதல் விவகாரத்தில், மாணவி துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் பாட்னாவின் பேகூர் பகுதியில், காய்கறி கடை நடத்தி வருபவரின் 15 வயதுடைய மகள், அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்திருக்கிறார். தனது காதலை அந்த மாணவிடம் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும், அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமாடைந்த அந்த இளைஞர், மேற்கண்ட மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். இதற்காக, நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் வாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், அந்த மாணவி டியூசன் சென்டருக்கு சென்று விட்டு, வீடு திரும்பி இருக்கிறார். அப்போது, அந்த மாணவியை பின்தொடர்ந்து வந்திருக்கிறார் அந்த இளைஞர். ஆனால், அவரை சட்டை செய்யாமல் மாணவி, விறுவிறுவென நடந்து சென்றிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான் பையில் மறைத்து கொண்டு வந்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து, அந்த மாணவியின் கழுத்தில் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில், பலத்த காயமடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடந்த சம்பவங்கள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி விட்டது. அதில், அந்த மாணவியை மேற்படி இளைஞர் துப்பாக்கியால் கழுத்தில் சுடுவதும், பின்னர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் தெளிவாக பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை வைத்து மேற்படி இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், இந்த வீடியோவை யாரோ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இக்காட்சிகள் நெஞ்சை பதைப்பதைக்க வைப்பதாக இருக்கிறது.


Share it if you like it