ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணம் மீட்பு: மத்திய அமைச்சர் தகவல்!

ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணம் மீட்பு: மத்திய அமைச்சர் தகவல்!

Share it if you like it

மத்திய அரசால் இதுவரை 1.25 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் மீட்கப்பட்டிருப்பதாக, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அஸ்வினி வைஷ்ணவ், “ஏழைகளின் நலனுக்காக சேமிக்கப்படும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிகளைச் சென்றடைகிறது’ என்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கூறியிருந்தார். ஆனால் இன்று, 100 சதவிகிதமும் வங்கி மூலம் நேரடியாக பயனாளிகளைச் சென்றடைகிறது. அதேபோல், முன்பு 85 சதவிகித திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் இன்று, 26 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் சேமிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இது திடீரென நடந்துவிடவில்லை. இதற்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் இருந்தது.

கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் பல நாடுகள் சிரமங்களைச் சந்தித்தன. ஆனால், நாம் கோவின் இணையதளத்தின் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு வெற்றிகரமாக செலுத்தி இருக்கிறோம். மத்திய அரசின் இ-வர்த்தக தளத்தில் 125 கோடி விவசாயிகள் பதிவு செய்திருக்கிறார்கள். இத்தளத்தில் பதிவு செய்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து அரசு 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்திருக்கிறது. மேலும், வருமான வரி கணக்கீடு, வருமான வரித்துறை திருப்பி அளிக்கும் பணம், ஏலம் என அனைத்தும் தற்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஒருவரின் முகத்தைப் பார்க்காமலேயே இப்பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, .4,300 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்திருக்கிறது. 1.25 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டிருக்கிறது. வரி ஏய்ப்புக்காக உருவாக்கப்பட்ட 1.75 லட்சம் ஷெல் கம்பனிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

நாடு வளர்ச்சி காண வேண்டும் என்றால், நல்லாட்சியின் மூலம் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டிருக்கிறார். நல்லாட்சி இருந்தால்தான் அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுயைாக சென்றடையும். ஆகவே, நாடு குறுக்குவழி அரசியலை நோக்கிச் செல்லாமல், நல்லாட்சியை நோக்கி நகர வேண்டும் என்பதில் பிரதமர் மோடிக்குத் தெளிவான பார்வை இருக்கிறது. குறுக்கு வழி அரசியல் நாட்டுக்கும், மக்களுக்கும் கேட்டையே அளிக்கும். நல்லாட்சிதான் அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதன் காரணமாகவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. மோடி எப்போதுமே திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். அதனால்தான் ஒவ்வொரு மாதமும் முன்னேற்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன” என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


Share it if you like it