கோவை சரக டி.ஐ.ஜி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கோவை சரக டி.ஐ.ஜி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Share it if you like it

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் சி.விஜயகுமார். இவர், இன்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் நடைப்பயிற்சிக்குச் சென்று விட்டு, காலை 6.50 மணிக்கு தனது முகாம் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அப்போது, தனது மெய்க் காப்பாளர் ரவியிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கி, தனக்குத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு சக காவலர்கள் வந்து பார்த்தபோது, டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, டி.ஐ.ஜி.யின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு நேரடி ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த விஜயகுமார், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக பணிபுரிந்திருக்கிறார். சென்னையில் அண்ணா நகர் துணை கமிஷனராக பணியாற்றியபோது, இவருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவியேற்று பணிபுரிந்து வந்திருக்கிறார்.


Share it if you like it