5 வயது குழந்தை… கொளுத்தும் வெயில்… கட்டிப்போட்ட கொடூர தாய்!

5 வயது குழந்தை… கொளுத்தும் வெயில்… கட்டிப்போட்ட கொடூர தாய்!

Share it if you like it

டெல்லியில் சரியாக வீட்டுப்பாடம் செய்யாத தனது 5 வயது மகளை, கை, கால்களை கயிற்றால் கட்டி மொட்டை மாடியில், கொளுத்தும் வெயிலில் போட்ட கல்நெச்சுக்கார தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி கரவால் நகர் துக்மிர்பூரில்தான் இப்படியொரு கொடூரமான சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த 5 வயதுடைய சிறுமி, பள்ளியில் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை சரியாக செய்யாமல் விளையாடுவதும், டி.வி. பார்ப்பதுமாக இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தாய், பச்சக்குழந்தை என்றும் பாராமல், அச்சிறுமியின் கை, கால்களை கயிற்றில் கட்டி, மொட்டை மாடிக்குத் தூக்கிச் சென்று கொளுத்தும் வெயிலில் போட்டிருக்கிறார். வெயிலின் சூடு தாங்காமல் துடிதுடித்த அச்சிறுமி, தன்னை விடுவிக்குமாறு தாயிடம் கெஞ்சுவதும், முணுமுணுப்பதும், அழுவதுமாக இருந்திருக்கிறார்.

நீண்ட நேரமாக சிறுமியின் அழுகுரல் கேட்கவே, சந்தேகமடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மாடிக்கு வந்து பார்த்தபோதுதான் இப்படியொரு கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் தனது செல்போனில் மேற்படி காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்து ஆத்திரமடைந்த பலரும் டெல்லி போலீஸை டேக் செய்து வீடியோ பதிவிட்டு வைரலாக்கினர். விஷயம், டெல்லி காவல்துறையின் கவனத்துக்குச் செல்லவே, மேற்படி விவகாரம் தொடர்பாக நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “இந்த சிறுமி 1 -ம் வகுப்பு படித்து வருகிறார். டெல்லியின் கரவால் நகரிலுள்ள துக்மிர்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறுமியை அவரது தாய் கட்டிப்போட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்கள். அந்த தாயின் மனிதாபிமானமற்ற செயலுக்கு பல்வேறு நபர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it