ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது – அண்ணாமலை !

ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது – அண்ணாமலை !

Share it if you like it

அயோத்தி கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை,நேரடி ஒளிபரப்பு செய்ய, திமுக அரசு தடை செய்து உத்தரவிட்டதை, தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை அடுத்து, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது, மதுரை காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக X பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாவது :-

அயோத்தி ஶ்ரீராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, திமுக அரசு தடை செய்து வாய்மொழியாக உத்தரவிட்டதை, தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை அடுத்து, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது, மதுரை காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

அறநிலையத் துறை அதிகாரிகள் இந்தத் தடை குறித்து தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள், கோவில்களுக்கு வந்த பக்தர்களைத் தடுத்த செய்திகள் என பல ஆதாரங்கள் உள்ள நிலையிலும், திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்வது ஊடகங்களின் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று திமுக எதிர்பார்ப்பது வேடிக்கை.

அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசு, பொதுமக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Share it if you like it