என் மீதான இந்தியாவின் நம்பிக்கை… பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரை!

என் மீதான இந்தியாவின் நம்பிக்கை… பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரை!

Share it if you like it

என் மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல. தொலைக்காட்சிகளில் தோன்றுவதாலும் அல்ல. நாட்டு மக்களுக்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்துள்ளதால் மக்கள் நம்புகின்றனர் என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது, ”100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலகம் பிளவுபட்டிருக்கிறது. இச்சூழலிலும், இந்தியா 5-வது பொருளாதாரமாக உருவெடுத்திருக்கிறது என்றால், நாட்டு மக்களில் யாருக்குத்தான் பெருமிதம் இருக்காது? நமது நாட்டின் இந்த சாதனை யாருக்கேனும் வேதனையை தந்திருக்குமானால், அவர்கள் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை, நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது.

ஜி20 தலைமையை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். இது 140 கோடி மக்களையும் பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது. ஆனால், இதுகூட சிலரை வேதனைப்பட வைத்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. இந்தியா வலிமை பெற்றிருக்கிறது. இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை மேம்பட்டிருக்கிறது. இந்தியாவில் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. உலகில் உள்ள நம்பகமான அமைப்புகளும், ஆழமாக ஆராயும் நிபுணர்களும் இந்தியாவை நம்பிக்கையுடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறார்கள். இது எப்படி நிகழ்கிறது? ஒட்டுமொத்த உலகமும் எப்படி இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. இந்திய வரலாற்றிலேயே 2004-14 காலகட்டம்தான் முழுமையான ஊழல் காலகட்டம். அந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தன. என் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக வருவதாலோ அல்லது தொலைக்காட்சிகளில் தோன்றுவதாலோ அல்ல. மக்களின் நலனுக்காக ஒட்டுமொத்த வாழ்க்கையையும் செலவிட்டு வருவதால்தான். என் மீதான இந்தியாவின் நம்பிக்கை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது” என்றார்.


Share it if you like it