வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என்.வி.எஸ்.-01 செயற்கைக்கோள்: இஸ்ரோ தலைவர்!

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என்.வி.எஸ்.-01 செயற்கைக்கோள்: இஸ்ரோ தலைவர்!

Share it if you like it

என்.வி.எஸ்.-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இஸ்ரோ கடந்த 1980 முதல் பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஏவுதளம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கிறது. இந்த சூழலில், ஸ்ரீஹரிகோட்டைவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 10.42 மணிக்கு என்.வி.எஸ்.-01 செயற்கைகோளுடன், ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12’ ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ. இந்த ‘என்.வி.எஸ்.-01’ செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஜி.எஸ்.எல்.வி.எஃப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட என்.வி.எஸ்.-01 வழிகாட்டி செயற்கைக்கோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார். மேலும், இப்பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், இது இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் திறன் கொண்டது. கடல்சார் இருப்பிடம், பேரிடர் மேலாண்மை தகவல்களை வழங்கும். செல்போன்களுக்கான நேவிகேஷன் வசதி, அரசு, நிதி, மின்துறை நிறுவனங்களுக்கு தரவுகளை பெறமுடியும். மேலும், இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்றும், பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.


Share it if you like it