குடும்பத்தை மறந்து 6 மாதமாக பக்தியோடு ஸ்ரீ ராமரின் சிலை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ் !

குடும்பத்தை மறந்து 6 மாதமாக பக்தியோடு ஸ்ரீ ராமரின் சிலை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ் !

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு வந்த 3 சிலைகளில், கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த 5 வயதுடைய குழந்தை இராமர் சிலையை, அறக்கட்டளை நிர்வாகிகள் ஓட்டெடுப்பு வாயிலாக தேர்வு செய்திருக்கின்றனர்.

இச்சிலை, ஸ்ரீராமரின் குழந்தைப் பருவம், குறும்புத்தனம், கம்பீரத்தை சித்தரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இச்சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ் குடும்பம், 200 ஆண்டுகளாக சிற்பங்கள் செதுக்குவதில் சிறந்து விளங்குகிறது. இவரது தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா என 5 தலைமுறையாக சிற்பத் தொழில் செய்து வருகின்றனர்.

எம்.பி.ஏ. முதுகலை படிப்பு முடித்த அருண் யோகிராஜ், தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஆனால், சிற்பக் கலையின் மீதிருந்த ஆர்வத்தால், பணியை துறந்து பரம்பரை தொழிலில் ஈடுபட்டார். இவர், 2008-ம் ஆண்டு முதல் சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட வெவ்வேறு சிலைகளை வடிவமைத்திருக்கிறார்.

குறிப்பாக, கேதார்நாத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியார் சிலை, புதுடெல்லியின் இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை ஆகியவை இவர் வடிவமைத்துதான். இச்சிலைகளை திறந்து வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அருண் யோகிராஜை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அருண் யோகிராஜ் கூறுகையில், “ராம் லல்லா சிலை வடிவமைக்க வாய்ப்புக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்” என்றார். அதேபோல, அவரது தாயார் சரஸ்வதி கூறுகையில், “நிறைய புராண புத்தகங்களை ஆய்வு செய்து இச்சிலையை வடிவமைத்திருக்கிறார். சிலை மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவரது தந்தை இல்லையே என்பது வருத்தமாக உள்ளது” என்றார்.

அருண் யோகிராஜ் மனைவி விஜேதா கூறுகையில், “என் கணவர் கடந்த 6 மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை. அயோத்தியிலேயே பலராமர் சிலை வடிவமைப்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டார். 6 மாத கைக் குழந்தை இருந்தும், அதைக்கூட பார்க்க வரவில்லை. எனது கணவர் வடிவமைத்த சிலை நிச்சயம் தேர்வு செய்யப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது” என்றார்.

அருண் யோகிராஜ் அண்ணன் சூரிய பிரகாஷ் கூறுகையில், “எனது தம்பி, மைசூரு மாவட்டம் ஹெச்.டி.கோட்டில் கிடைக்கும் கிருஷ்ண கல்லில் பாலராமர் சிலையை வடிவமைத்திருக்கிறார். பொதுவாக, 850 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் இரும்பும் கரைந்து விடும். ஆனால், இந்த வகை சிலை மீது ஆசிட் வீசினாலும் ஒன்றும் ஆகாது, வெடிக்காது. மழை, காற்று, வெயில் எதுவானாலும் ஒன்றும் ஆகாது.

மைசூரு அரண்மனையில் உள்ள சிலைகளும், கிருஷ்ண கல்லால் வடிவமைக்கப்பட்டவைதான். ஹெச்.டி.கோட் ஹாசனில் மட்டுமே இந்த வகை கற்கள் கிடைக்கும். மிகவும் கெட்டியாக இருப்பதால், சிலை செதுக்குவது கடினமான பணியாகும். அனைத்து பருவ காலத்திலும் ஒரே மாதிரியான அனுபவத்தை தரும் என்பதால், வெளிநாடுகளில் வீட்டின் மேற்கூரைக்கு இந்த கல்லை பயன்படுத்துகின்றனர். இந்த கற்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து ராம் மந்திர் அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால் கூறுகையில், “3 சிலைகளும் தயாராக இருக்கின்றன. இந்த 3 சிலைகளுமே ஸ்ரீராமர் கோவிலுக்குள் நிறுவப்படும். ஆகவே, சிலைகளுக்கு இடையே போட்டி இல்லை. 3 சிலைகளும் அவசியம். இவை 3-ம் வெவ்வேறு இடங்களில் நிறுவப்படும். இதைக் கருத்தில் கொண்டே 3 சிலைகள் செய்யப்பட்டன” என்றார்.

கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கணேஷ் பட், அருண் யோகிராஜ், ஜெய்ப்பூரைச் சேர்ந்த சத்ய நாராயண் பாண்டே ஆகிய 3 பேரும் 3 வெவ்வேறு இடங்களில், 3 வகையான கற்களை பயன்படுத்தி சிலைகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞரான கர்நாடகாவின் கர்காலா நகரைச் சேர்ந்த வாசுதேயோ காமத் ஓவியத்தின் அடிப்படையில் இந்த இராம் லல்லா சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சிலை தயாரானதைத் தொடர்ந்து, 1985-ம் ஆண்டு முதல் ஆடைகளை உருவாக்கி வரும் தையல்காரர் குடும்பத்தை அறக்கட்டளை நிர்வாகிகள் வரவழைத்து இராம் லல்லாவுக்கான ஆடைகளை வடிவமைக்கும்படி கூறினர். இதையடுத்து, அவர் கும்பாபிஷேக விழாவுக்கான இராம் லல்லாவுக்காக தனித்துவமான மஞ்சள் நிற ஆடையை வடிவமைத்து வருகிறார்.


Share it if you like it