2 ஆண்டில் மின்வாரியத்தில் ரூ.397 கோடி மெகா ஊழல்: செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலையின் அடுத்த ஆப்பு!

2 ஆண்டில் மின்வாரியத்தில் ரூ.397 கோடி மெகா ஊழல்: செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலையின் அடுத்த ஆப்பு!

Share it if you like it

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருக்கும் நிலையில், அவர் மின்சாரத்துறை அமைச்சரான 2 ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் 397 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அட்டாக் செய்திருக்கிறார்.

தி.மு.க. அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கடந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். தற்போது, டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார். “தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் டிஸ்ட்ரிபியூஷன் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 397 கோடி ரூபாய் அளவிலான மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில் 45,000 டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்திலும் அனைத்து ஒப்பந்தக்காரர்களும் ஒரே தொகையைக் குறிப்பிட்டிருப்பதை பார்த்ததுமே, ஒப்பந்த ஆய்வுக் குழு, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் சந்தை மதிப்பை விட மிக அதிகத் தொகைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு டிரான்ஸ்பார்மருக்கும் சந்தை மதிப்பை விட சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இப்படி 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கணக்கில் கொண்டால், சுமார் 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அனைத்து ஒப்பந்தக்காரர்களும் சேர்ந்து மின்துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சருடன் இணைந்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஊழலில் முக்கிய நபரான காசி என்பவர், மின்சார வாரியத்தில் கொள்முதல் நிதிப் பிரிவில் வேலை செய்பவர் என்றும், அலுவலகத்துக்கே செல்லாமல் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் இருந்தபடியே மின்சார வாரிய ஒப்பந்தங்களை முடிவு செய்வார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நபர், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டவர் என்றும், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவரது பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஊழல் செய்வதற்காகவே கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பணியிலமர்த்தி, அமைச்சர் வீட்டில் இருந்து ஒப்பந்தங்களை முடிவு செய்வது எல்லாம் திறனற்ற தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான் சாத்தியம்.

அமைச்சருக்கும், மின்சார வாரிய நிர்வாகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாமல், 397 கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை. உடனடியாக, அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், மற்றும் காசி உட்பட தொடர்புடைய மின்சார வாரிய பணியாளர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார். மேலும், அறப்போர் இயக்கத்திற்கும் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it