தி.மு.க. கூட்டம்… எம்.எல்.ஏ. ஆவேசம்… அமைச்சர் எஸ்கேப்!

தி.மு.க. கூட்டம்… எம்.எல்.ஏ. ஆவேசம்… அமைச்சர் எஸ்கேப்!

Share it if you like it

அமைச்சர், எம்.பி.க்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் பொங்கியதால், கூட்டத்தில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷும், எம்.பி. பழனிமாணிக்கமும் எஸ்கேப்பாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் பட்டுக்கோட்டை மதுக்கூர் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தஞ்சை எம்.பி. பழனிமாணிக்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. அசோக்குமார், “தற்போது தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் எந்த பலனும் அடையவில்லை.

மாறாக, கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மட்டுமே பலன்களை அடைந்து வருகின்றனர். மேலும், அடிமட்ட தொண்டர்களை, மேல்மட்ட நிர்வாகிகள் மதிப்பதில்லை. அமைச்சர்கள் எங்கள் பகுதிக்கு வரும்போது, ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால், அடிமட்டத் தொண்டர்களின் கோரிக்கைகள் மற்றும் நிலையை அமைச்சர்களிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை. அதோடு, எம்.பி. எங்கள் பகுதிக்கு வருவதே இல்லை” என்றா ஆவேசமாக.

இதையடுத்து, எம்.எல்.ஏ.வின் பேச்சை கண்டித்து ஒரு தரப்பினர் கூச்சலிட்டனர். பதிலுக்கு எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர் கூச்சலிட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமைச்சரும், எம்.பி.யும் அமைதியாக இருக்கும்படி எவ்வளவோ எடுத்துக் கூறியும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் நீண்டநேரம் நீடிக்கவே, அமைச்சரும், எம்.பி.யும் எஸ்கேப்பானார்கள். தி.மு.க. கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it