‘அந்த’ ஆடியோ லீக்: கலக்கத்தில் அமைச்சர்!

‘அந்த’ ஆடியோ லீக்: கலக்கத்தில் அமைச்சர்!

Share it if you like it

விதவை பெண்ணுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், அமைச்சர் மட்டுமல்லாது தி.மு.க.வினரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

தி.மு.க.வில் முக்கியப் புள்ளிகளாக இருக்கும் பலரும் பெண்கள் விஷயத்தில் சிக்கி சர்ச்சைகளுக்கு உள்ளானவர்கள்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தற்போது தி.மு.க. அமைச்சராக இருக்கும் பெரியகருப்பன், ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திருச்சி சிவா, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒருவருடன் இருந்த போட்டோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான், தற்போது அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ், ஒரு பெண்ணுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருப்பவர் மனோ தங்கராஜ். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் நகரைச் சேர்ந்தவர். சமீபத்தில் சென்னை ஆர்.கே.நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது, பா.ஜ.க.வில் இருக்கும் நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் பற்றி, அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக் அவதூறாகப் பேசினார். ஆனால், இதை கண்டிக்காமல் கைதட்டி ரசித்து சிரித்துக் கொண்டிருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். ஆகவே, நடிகை குஷ்பு மற்றும் பா.ஜ.க. மகளிர் அணியினர் அமைச்சர் மனோ தங்கராஜின் செயலை கண்டித்தனர். அப்போதும், தனது தவறுக்காக மன்னிப்புக் கேட்காத மனோ தங்கராஜ், பா.ஜ.க. ஆண் நிர்வாகிகளை பற்றி அவதூறாகப் பேசினார்.

இதையடுத்து, மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்து தமிழக பா.ஜ.க. மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “பா.ஜ.க.வுக்கு பெண்களைப் பற்றி பேச என்ன தகுதி என்று மனோ தங்கராஜ் கேட்டிருக்கிறார். அவர், பெண்கள் விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்பது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நன்கு தெரிந்த செய்திதான். அமைச்சர் மனோ தங்கராஜிடம் உதவி கேட்டு வந்த இளம் விதவைப் பெண்ணை, தன் சாகச வலையில் வீழ்த்த நினைத்த சம்பவத்தின் ஆதாரங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் இன்னும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. 2021-ம் ஆண்டு இவருக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரக்கூடாது என்று வலியுறுத்தி பல பெண்களும், பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்தியதை தமிழகம் மறந்திருக்க முடியாது?” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், மேற்படி இளம் விதவைப் பெண்ணிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் ஆடியோ என்கிற பெயரில் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் பேசுவது அமைச்சர் மனோ தங்கராஜின் குரல்தான் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது. ரிங் ஒலித்ததும் போனை எடுத்து ‘ஹலோ’ என்று அப்பெண் சொல்ல, “எப்புடி இருக்கப்பா” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்கிறார். ‘ம்… நல்லா இருக்கேன்’ என்று அப்பெண் மீண்டும் சொல்ல, “சந்தோஷமா இருக்கியாப்பா” என்று கேட்கிறார். உடனே, “இப்போ அசெம்பிளி நடக்குதுல்ல, அதான் உன்னை பார்க்கலாம்னு நெனச்சேன்” என்கிறார் மனோ தங்கராஜ்.

அதற்கு, ‘என்னை எதற்கு பார்க்க வேண்டும்’ என்று அப்பெண் கேட்க, அமைச்சர் வித்தியாசமாகப் பேச, ஆத்திரமடைந்த அப்பெண்ணோ “சார், இனிமே எனக்கு போன் பண்ணாதீங்க. உங்ககிட்ட பேச எனக்கு சீரியஸாவே பிடிக்கலை. என்னைய இனிமே டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று சொல்கிறார். அதற்கு, “அப்டியா” என்று கேட்க, “நா உங்ககிட்ட ஏகப்பட்ட தடவ சொல்லிட்டேன். எவ்வளவு சொன்னாலும் நீங்க புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க. தயவு செஞ்சு என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. எனக்கு ஆயிரத்தெட்டு கமிட்மென்ட்ஸ் இருக்கு. உங்ககிட்ட பேசி என்னய மேலும் நா மூடு அவுட் பண்ணிக்க விரும்பல” என்று கூற, “சரி சரி” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுவதோடு உரையாடல் முடிவடைக்கிறது.

இந்த ஆடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை கேட்ட பலரும் அமைச்சர் மனோ தங்கராஜை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். மேலும், பெண்களுக்கு சம உரிமை பற்றி வாய்கிழிய பேசும் தி.மு.க.வின் லட்சணத்தைப் பாரீர் என்று நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். தி.மு.க.வைப் பொறுத்தவரை, சமூகநீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை என குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. ஆனால், அவை எல்லாவற்றையும் தி.மு.க.வினர் கடைப்பிடிக்கிறார்களா? என்றால், இல்லை என்ற பதிலே வரும். காரணம், பொதுவெளியில் அக்கட்சியினர் நடந்துகொள்ளும் விதம் அப்படி என்றும் கலாய்த்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக, சமீபத்தில் தனது காலில் விழும் கட்சித் தொண்டர்களை அற்பப் புழுவைப் போல கருதி அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கடந்து சென்ற விதம்தான்.


Share it if you like it