24 மணி நேரம்… 4 ட்ரோன்கள்… டுமீல்… டுமீல்..!

24 மணி நேரம்… 4 ட்ரோன்கள்… டுமீல்… டுமீல்..!

Share it if you like it

கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப் சர்வதேச எல்லை பகுதியில் 4 வெவ்வேறு இடங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 ட்ரோன்களை இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “டி.ஜே.ஐ. மெட்ரிஸ் 300 ஆர்.டி.கே. தயாரிப்பின் கறுப்பு குவாட்காப்டரான முதல் ட்ரோன் அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள உதர் தரிவால் கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் ட்ரோனை இடைமறித்த வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேபோல, ரத்தன் குர்த் கிராமத்தில் இரவு 9.30 மணியளவில், 2-வது ட்ரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்த ஆளில்லா விமானத்தில் இருந்து 2.6 கிலோ ஹெராயினை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு 3-வது ஆளில்லா விமானம் இடைமறித்து சுடப்பட்டது. ஆனால், அது பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் விழுந்ததால், அதை மீட்க முடியவில்லை. 4-வது ஆளில்லா விமானம் சனிக்கிழமை இரவு இந்திய வான்வெளி விதிகளை மீறி அமிர்தசரஸ் செக்டார் எல்லையில் பறந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் அதுவும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதிலிருந்தும் சந்தேகத்திற்கிடமான போதைப் பொருள் பை ஒன்று மீட்கப்பட்டுள்ளது” என்றார். ஆக, 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 ட்ரோன்களை இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள்.


Share it if you like it