தேசப்பிரிவினையை கடுமையாக எதிர்த்த : V.S. சீனிவாச சாஸ்திரி

தேசப்பிரிவினையை கடுமையாக எதிர்த்த : V.S. சீனிவாச சாஸ்திரி

Share it if you like it

1891ஆம் வருடம், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரி, கல்லூரி தலைவர் ஒரு ஆங்கிலேயர், வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

https://youtu.be/Ob15CpNBBYM

அப்போது ஒரு “தமிழ் இளைஞன் திடீரென எழுந்து, “நீங்கள் இப்போது உச்சரித்த ஆங்கில உச்சரிப்பில் பிழை உள்ளது” என்று கூறினான். கூடவே ஒரு உச்சரிப்பைச் சொல்லி, இது தான் சரி என்று சாதித்தான்.
திடுக்கிட்ட தலைவர், “என் தாய்மொழி ஆங்கிலம். நான் சொல்வது தான் சரியான உச்சரிப்பு” என்றிருக்கிறார்.
அகராதியில் பிறகு சரி பார்த்த போது, இளைஞன் கூறியதே சரியான உச்சரிப்பு என்றிருந்தது. அந்த ஆங்கிலேய ஆசிரியர், வியந்து போனார்!


பிற்காலத்தில் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை நேருக்கு நேர் சந்தித்து, தன் தாய் நாட்டிற்காக வாதாடிய போது, அவர், இவரது ஆங்கிலப் புலமை வியந்து. ” என் தாய் மொழி ஆங்கிலம் இத்தனை சிறப்பானது என, இவர் பேச்சை கேட்ட பிறகு தான் உணர்ந்தேன்” என்றார்.


ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி இவரது பேச்சில் மயங்கி, “ரைட் ஹானரபில்” என்ற பட்டத்தையும் வழங்கி ‘சில்வர் டங் ’ என்றும் அழைத்தார்.


பின்பு, பிரிட்டிஷ் அரசின் ‘ரவுலட் சட்டத்தை’ எதிர்த்து இவர், இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் ஆற்றிய உரை, வரலாற்றின் பொன்னெழுத்து உரைகளில் ஒன்று.


உலகம் வாய் பிளந்து, கேட்டது, அதைக் கேட்க M.K. காந்தி பார்வையாளராக சென்றிருந்தார்…
ஒரு புகழ் பெற்ற ஆங்கில டிக்ஷனரியை வடிவமைக்க, இந்த “தமிழரின்” உதவியை அவர்கள் வேண்டினார்கள்!!
லீக் ஆஃப் நேஷன்ஸ்,
மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சில்,
இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில்,
கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் ,
பிரிவி கவுன்சில்
முதலியவற்றில் இவர் உறுப்பினர்.


1935 முதல் 1940 வரை ஐந்து ஆண்டுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்!
கோகலே தான் இவரது அரசியல் குரு.


கோகலே இறந்த பின், ‘சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ சொசைட்டியின் தலைவராக, 12 ஆண்டுகள் பணி ஆற்றினார்.
இந்தியா, மத அடிப்படையில் பிரிக்கப் படுவதை, மிகக் கடுமையாக எதிர்த்தவர்.
பொறுப்பான பதவிகளில், இந்தியர்களை நியமிக்க ஆங்கிலேய அரசு மறுத்த போது. கொதிப்படைந்து, ஆங்கிலேய அரசின் பித்லாட்டத்தை, அக்கு வேறு ஆணி வேராக வெளிச்சம் போட்டு உலகுக்கு உணர்த்தினார்.
யார் அந்த தமிழர்,


அவர் தான் “ரைட் ஹானரபில், சில்வர் டங்க் வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி” அவர்கள்.
கும்பகோணம் அருகிலுள்ள குக் கிராமம் வலங்கைமானில் , மிக ஏழை புரோகித தந்தைக்கு, 1869 செப்டம்பர் 22-ல் மூத்த மகனாகப் பிறந்தார்.


சம்சாரக் குடும்பம், கூடப் பிறந்தவர்கள் ஆறு பேர்.
கல்லூரிப் படிப்பு கும்பகோணம் அரசுக் கல்லூரியில், BA முதல் வகுப்பு,
படிப்பை உபகார சம்பளத்திலேயே முடித்தவர்.


ஒரு முறை இவரிடம், தங்கள் திறமைக்கு யாது காரணம்? என்று கேட்ட போது,
என் தந்தையும், நான் பிறந்த கிராமச் சூழலும் தான் என்றாராம்..
எப்படி?


“வலங்கை மானில் வேதாத்தியயனம் செய்தவர், காவிய நாடகங்கள் பாடம் சொல்லும் வித்வான்கள், அனேகர் உண்டு.
ஒரு ஹவ்யகவ்யமென்றால் நாற்பது, ஐம்பது பேர் கூடுவர், சேர்ந்து பஞ்சாதி சொல்வார்கள். நாலைந்து பண்டிதர்கள், பல சிஷ்யர்களுடன் குடமுருட்டி ஸ்நானம், குளத்தில் சந்தியா வந்தனம், கோவில் சுவாமி தரிசனம் போகும் போது, கோஷ்டியாக வேதங்களை கோஷித்துக் கொண்டு போவது உண்டு. தீஷிதர் என்ற ஒரு நல்ல குணமும், பாண்டித்தியமும் உள்ள ஒரு உஞ்சவிருத்தி பெரியவர், எங்கள் வீட்டுக்கு, சமீபம் இருந்தார். இவற்றில் எல்லாம், நான் இருக்க வேண்டும், பாடம் கேட்க வேண்டும் என்பதில், என் தகப்பனாரின் வெகு கண்டிப்பு. ” என்றாராம்.


“இந்தியா மீது அவருக்கு இருந்த தேச பக்தி அளவற்றது.. நாட்டுக்காகவே வாழ்ந்தார், மறைந்தார்…. தன்னலமற்றவர்”
இது ஹரிஜன் இதழில் M. K.. காந்தி இவரைப் பற்றி எழுதிய குறிப்பு தன் 76-வது வயதில் சென்னையில் ஏப்ரல் 17, 1946, இல் இசை பட வாழ்ந்து மறைந்தார். வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி, இந்திய அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் இருந்தார். ஆங்கில மொழி மீது உள்ள புலமைக்காகவும் மற்றும் சொற்பொழிவுகளுக்காகவும் மிகவும் பாராட்டப் பட்டார். பிரிட்டனில், 1916 – 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால், பாராட்டப்பட்ட பெருமைக்குரிய சாஸ்திரிக்கு , “ரைட் ஹானரபில்” என்ற பட்டத்தை, ஆங்கிலேயர்கள் வழங்கினர். தமிழர்கள் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் சாஸ்திரி.


வரலாறு:


இவர், பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமைகளில் ஒருவர். காந்தி பிறப்பதற்கு பத்து நாட்கள் முன்பு, பிறந்தவர் சாஸ்திரி. பிற்காலத்தில் காந்தியார் இவரை, அண்ணன் என்று அழைத்த வரலாறும் உண்டு.


ஒரு பள்ளி ஆசிரியராகத், தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாஸ்திரி, பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்கு நேர் விவாதிக்கும் ஆளுமையாக உயர்ந்தவர். காந்தி, இந்தியா வருவதற்கு முன்பே ரானடே, கோகலே போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடியவர் சாஸ்திரி. நாடு பூரண சுதந்திரம் பெற வேண்டும் என அயராது பாடுபட்ட அறிவு ஜீவிகளில் இவரும் ஒருவர்.


வெள்ளி நாக்கு சாஸ்திரி:


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இவரை ‘சில்வர் டங் சாஸ்திரி’ (வெள்ளி நாக்கு சாஸ்திரி) என்று அழைத்தனர். சாஸ்திரியின் ஆங்கிலப் புலமை பற்றி, வின்ஸ்டன் சர்ச்சில் வியந்து பேசியிருக்கிறார். 1935 முதல் 1940 வரை, ஐந்து ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தராகப் பணியாற்றியவர். அப்போது, தமிழகத்தின் முதல் இந்தி எதிர்ப்பின் போது, மாணவர்களை லகுவாகக் கையாண்டவர் சாஸ்திரி. இந்தியா, மத அடிப்படையில் பிரிக்கப் படுவதைக், கடுமையாக எதிர்த்தார்.


முதல் உலகப் போருக்குப் பிறகு, உருவான சர்வதேச அமைப்பான ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’, இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது. அதில், சாஸ்திரியார் இந்தியப் பிரதிநிதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்காவின் பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார். திருவல்லிக்கேணி அர்பன் கோ-ஆபரேடிவ் சொசைட்டி எனப்படும் (டி.யு.சி.எஸ்.) அமைப்பு, 1904-ல் இவரது முயற்சியால் தான் உருவானது.


வலங்கை மானில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சாஸ்திரி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரிப் படிப்பைக் கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும், பயின்று 1888-ல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும், சம்ஸ்கிருதத்திலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவரது தனித் திறமையால் பள்ளி, கல்லூரிப் படிப்பை ஆங்கிலேயே அரசின் கல்வி உதவி மூலம் பெற்றார்.


1893-ல் சாஸ்திரி, சேலம் முனிசிபல் கல்லூரியில், முதல் நிலை உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் அங்கு, ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில், அப்போது சேலம் கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட சி.விஜய ராகவாச்சாரியாரை அறிந்த பிறகு, பொது விஷயங்களில் ஈடுபட, ஆர்வம் கொண்டார். அந்தச் சமயத்தில், ‘தி இந்து’ பத்திரிகையில் மக்களின் துயரங்களைப் பற்றி, பல கட்டுரைகள் எழுதி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதற்கு, அவர் மேல் ஆங்கிலேயே அரசு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது.


பிறகு, சென்னையில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1902-ல் சாஸ்திரி, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, அந்தப் பள்ளியை, மெட்ராஸ் மாகாணத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாக உயர்த்தினார், என்பது வரலாறு.


ஸ்ரீனிவாச சாஸ்திரி, 17 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, தனது 37-வது வயதில் 1907-ல் பொது வாழ்க்கைக்கு வந்தார். அப்போது பூனாவில், ‘சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி’, என்ற இயக்கத்தை நடத்தி வந்த கோபால கிருஷ்ண கோகலேயுடன் இணைந்தார். கோகலேவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் சாஸ்திரி, அவரையே தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.


பொது வாழ்க்கைப் பயணம்:


1919-ல் முதன் முதலில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது, ‘நேஷனல் லிபரல் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா’ என்ற கட்சியை, சாஸ்திரி தொடங்கினார். 1915-ல் கோகலே இறந்த போது, ‘சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி’யின் தலைவராக சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து, 12 ஆண்டுகள் பணியாற்றினார். சாஸ்திரி, ‘மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில்’, 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை, ‘இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும்’ உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை, ‘கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ்’ எனும் அமைப்பிலும் பணியாற்றினார். மேலும், இந்தியாவில் நடக்கும் வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, மேல் முறையீடு செய்ய வேண்டுமானால், இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார்.


பிரிட்டிஷ் அரசு பிறப்பித்த ‘ரவுலட் சட்டத்தைத்’, தீவிரமாக எதிர்த்தார் சாஸ்திரி. இந்தச் சட்டத்தின் படி, அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றி, சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில், சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை, வரலாற்றில் போற்றப்பட்ட உரைகளில் ஒன்று. அவரின் விவாதத்தை நேரில் பார்க்க, காந்தி பார்வையாளராக கவுன்சிலுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் அடைவதற்கு 16 மாதங்களுக்கு முன்பு, சாஸ்திரி தனது 76-வது வயதில் சென்னையில் ஏப்ரல் 17, 1946 அன்று இறைவனடி சேர்ந்தார்.


Share it if you like it